நகையை எடுக்க பீரோவை திறந்தால்.. 31 பவுன் மொத்தமாக அபேஸ்.. விக்கித்து போன நடிகை ஜெயபாரதி!
ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகை கொள்ளை அடித்த 2 பேர் கைதானார்கள்
சென்னை: நகையை எடுக்க பீரோவை திறந்தால் ஒன்றைகூட காணோம்... மொத்த நகையும் அபேஸ் செய்யப்பட்டிருந்ததை கண்டு நடிகை ஜெயபாரதி திடுக்கிட்டார்.. நம்பி வேலைக்கு சேர்த்த டிரைவரும், வாட்ச்மேனும் கூட்டு சேர்ந்து நடிகை ஜெயபாரதியின் 31 சவரன் நகையை கொஞ்சம் கொஞ்சமாக திருடி உள்ளனர்!
சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் அவென்யூவில் வசித்து வருபவர் நடிகை ஜெயபாரதி... இவர் முத்து, அலாவுதின் அற்புத விளக்கு, மைக்கல் மதன காமராஜன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்... பல படங்களில் ரஜினி, கமலுடன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஆனால் தமிழைவிட மலையாளத்தில் நிறைய சூப்பர் ஹிட் படங்களை தந்துள்ளார். மலையாளத்தில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஜெயபாரதி நடித்து இருக்கிறார்.
வாட்ச்மேன்
இவரது வீட்டில் கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாக நேபாளத்தை சேர்ந்த வாட்ச்மேன் ஹர்க்பகதூர் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.. ஜெயபாரதிக்கு சாலிகிராம பகுதியில் இன்னொரு வீடு உள்ளது.. அங்குதான் வசித்து வருகிறார்.. அதனால் நுங்கம்பாக்கம் வீட்டை ஹர்பகதூர் தான் முழு நேரமாக பார்த்து வந்துள்ளார்.
ஜெயபாரதி
இந்நிலையில் கடந்த 2 நாளைக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு வேண்டி இருந்ததால், நகையை எடுப்பதற்காக நுங்கம்பாக்கம் வீட்டுக்கு வந்தார்... லாக்கரை திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு ஜெயபாரதி அதிர்ச்சி அடைந்தார்.. அதனால் உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசில் புகார் தந்தார். போலீசாரும் இது சம்பந்தமான விசாரணை நடத்தினர்.. அப்போதுதான் எந்நேரமும் அங்கேயே வேலை பார்க்கும் வாட்ச்மேன் ஹர்க்பகதூர் மற்றும் கார் டிரைவர் இப்ராஹிம் மீதும் சந்தேகம் எழுந்தது.
டிரைவர்
நடிகையின் வீட்டில் உள்ளவர்களை அழைத்து செல்ல கார் எடுத்து வரும்போதுதான். வாட்ச்மேனுக்கும், டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.. யாருமில்லாத வீட்டில் இப்படி நகையை திருட சொல்லி வாட்ச்மேனுக்கு ஐடியா தந்தே இப்ராஹிம்தான்... 3 மாசமாக கொஞ்சம் கொஞ்சமாக திருடியிருக்கிறார்.. மொத்தம் 31 சவரன் நகைகளை ஹர்க்பகதூர் திருடி இருக்கிறார். திருடிய நகைகளை 2 பேரும் சேர்ந்து அமைந்தகரையில் உள்ள ஒரு அடகு கடையிலும் விற்றுள்ளனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் 3 நாளைக்கு முன்பு திடீரென சொந்த ஊருக்கு போக வேண்டும் என்று ஹர்க்பகதூர் சொல்லவும்தான் இந்த திருட்டில் அவர்கள் மீது சந்தேகம் அதிகமானது... கார் டிரைவரை ஹர்க்பகதூரிடம் செல்போனில் நைசாக பேச வைத்து.. அதன்மூலம் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர் போலீசார்.. அடகு கடையில் விற்கப்பட்ட 31 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டு ஜெயபாரதியிடம் ஒப்படைக்கப்பட்டது.