ஜியோ, ஏர்டெல், வோடபோன் ரீசார்ஜ் கட்டணங்களை மீண்டும் உயர்த்த முடிவு? - வாடிக்கையாளர்கள் ஷாக்!
சென்னை: இந்திய டெலிகாம் நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் Jio, Airtel, VI நெட்வொர்க் ஆபரேட்டர்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் 10 - 12% வரை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான், ரீசார்ஜ் கட்டணங்களை ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தின. தற்போது, மீண்டும் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ரீசார்ஜ் கட்டணம் உயர்வு?
வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் Jio, Airtel, VI நெட்வொர்க் ஆபரேட்டர்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் 10- 12% வரை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் 5G பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு முடிவை டெலிகாம் நிறுவனங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது. உதாரணமாக, ரூபாய் 199 ரீசார்ஜ் கட்டணம் ரூபாய் 222-ஆக அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு உயரும்?
தற்போது ஒரு நாளைக்கு 2 ஜி.பி டேட்டா வசதி வழங்கக்கூடிய 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் 900 ரூபாய்க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம். தற்போது 719 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு ரீசார்ஜ் கட்டணம் இனி 799 ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், 10 முதல் 27 சதவிகிதம் வரை மாதாந்திர பிளான்களில் விலை ஏற்றப்பட்டன. ஏர்டெல் மாதாந்திர ப்ரீபெய்டு பிளானை 179 ரூபாயிலிருந்து 199 ரூபாய்க்கு உயர்த்தியது. போஸ்ட்பெய்டு பிளானை 399ல் இருந்து 449 ரூபாய்க்கு உயர்த்தியது.
பிஎஸ்என்எல்
ஏர்டெல் , ஜியோ நிறுவனங்கள் விலையை உயர்த்தியதும், வோடஃபோன் நிறுவனமும் விலையை உயர்த்தியது. இதுபோன்ற சிக்கல்களால் அரசு நிறுவனமான BSNLக்கு ஜாக்பாட் அடித்தது. பெரிய அளவில் சந்தாதாரர்கள் BSNL நிறுவனம் நோக்கி PORT செய்து நகர ஆரம்பித்தார்கள். ஆனால், இதெல்லாம் கொஞ்சம் காலம் தான்.
5ஜி சேவை இல்லை போன்ற குறைகளால் மீண்டும் பலரும் பி.எஸ்.என்.எல்.-லில் இருந்து திரும்பிவிட்டனர். இந்நிலையில், தற்போது மீண்டும் Jio, Airtel, VI நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த உள்ளன. 5G சேவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் தங்கள் வருவாயை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 1 முதல்
டிசம்ப 1 முதல் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வின் காரணமாக மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இனி ரீசார்ஜுக்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையாமல் இருக்க இந்த நிறுவனங்கள் கூடுதலாக சில என்டர்டெயின்மென்ட் சலுகைகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications