தமிழன் பற்றியெல்லாம் நீங்கள் பேசலாமா?.. அதிமுக ஜெயக்குமாருக்கு ஜோதிமணி எம்பி கேள்வி
சென்னை: தமிழன் என்றால் சுயமரியாதை, வீரம், ஈகை, மோடியரசிடம் அடிமையாகக் கிடக்கும் அதிமுக, தமிழன் பற்றியெல்லாம் பேசலாமா? என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமாருக்கு கரூர் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பாஜக தன் வாழ்நாளில் தமிழகத்தை ஆளவே முடியாது என தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டால் அதுகுறித்து பாஜக பரிசீலனை செய்யாமல் கெட் அவுட் என்கிறது என பேசினார். மக்களவை முடிந்தவுடன் வெளியே வந்த ராகுல் காந்தியிடம் தமிழர்கள் குறித்து அதிகம் பேசியது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கருத்து வைரல்
அதற்கு ராகுல் காந்தியோ நானும் தமிழன்தானே என்றார். இவரது இந்த கருத்து வைரலாகி வருகிறது. ராகுலின் கருத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் தமிழினத்தை கொன்றுவிட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

தமிழர் ஆகிவிடுவாரா
தமிழன் என ராகுல் கூறிவிட்டால் தமிழர் ஆகிவிடுவாரா? அவர் அவ்வாறு கூறியதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கரூர் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழன் என்றால் சுயமரியாதை,வீரம், ஈகை மோடியரசிடம், அடிமையாகக் கிடக்கும் அதிமுக, தமிழன் பற்றியெல்லாம் பேசலாமா?

பிறப்பால் தமிழரா
எமது தலைவர் ராகுல்காந்தி பிறப்பால் தமிழராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உணர்வால் , உள்ளத்தால் தமிழர். தமிழினத்தின் அடையாளமான சுயமரியாதை,வீரம், ஈகையின் இலக்கணம். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

அதிமுகவிடம் தேவையில்லை
அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் தமிழினம் அன்பைப் பொழிகிறது. அதிமுகவிடம் இருந்து எமது தலைவருக்கு 'தமிழன்' சான்றிதழ் எதுவும் தேவையில்லை என தனது ட்வீட்டில் ஜோதிமணி தெரிவித்துள்ளார். ராகுல் நான் தமிழர்தானே என கூறியதை தமிழக ட்விட்டர்வாசிகள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications