மதிமுகவுக்கு 3 அல்லது 4 தொகுதிகள்.. ஸ்டாலினின் அணுகுமுறையில் மாற்றம்.. பத்திரிகையாளர் மணி கணிப்பு!
சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றால், அந்த கட்சிக்கு 3 முதல் 4 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் நெருங்கிவிட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் அண்மையில் மதிமுக சார்பாக 2021 சட்டமன்றத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முத்து ரத்தினம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சேர்க்கப்பட்டார். அவர் மட்டுமல்லாமல் இன்னும் சில நிர்வாகிகள் சேர்க்கப்பட்டனர்.

ஸ்டாலினின் மாற்றம்
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த 8 ஆண்டுகளாக கூட்டணி கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் யாரையும் திமுக சேர்க்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் யாரும் சேர்க்கப்படவில்லை. ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், ஏன் ஸ்டாலின் அணுகுமுறையில் இந்த மாற்றம் நடந்தது என்ற கேள்வி எழுந்தது.
ஸ்டாலின் - வைகோ சந்திப்பு
இதன் காரணமாகவே அண்ணா அறிவாலயம் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மதிமுகவில் இருந்து விலகும் நிர்வாகிகளை திமுகவில் சேர்த்து கொள்ளக் கூடாது என்ற உறுதியை ஸ்டாலினிடம் இருந்து வைகோ பெற்றதாக தகவல் கிடைத்திருக்கிறது.
திமுகவின் வார்னிங்
திமுகவின் இந்த செயல்பாடுகளுக்கு மதிமுகவின் முதன்மைச் செயலாளரான துரை வைகோவின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் துரை வைகோ மத்திய அமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திமுக தலைமைக்கு தெரிந்திருக்கிறது. இதன் காரணமாகவே மதிமுகவுக்கு மறைமுகமாக திமுக வார்னிங் கொடுத்திருக்கிறது.
உறவில் வந்த சிக்கல்
அதுமட்டுமல்லாமல் மல்லை சத்யா திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக பணியாற்றுவதாக வைகோ மதிமுகவின் உள்ளரங்கு கூட்டத்தில் குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் பொதுவெளியில் மல்லை சத்யா விவகாரத்தில் திமுக மீது தவறு இல்லை என்றே வைகோ கூறி வருகிறார். இதன் மூலமாக திமுக - மதிமுக இடையிலான உறவில் சிக்கல் எழுந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
பத்திரிகையாளர் மணி பேட்டி
இதுகுறித்து ஒன் இந்தியா அரசியலுக்கு பத்திரிகையாளர் மணி அளித்துள்ள பேட்டியில், திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடர்ந்தாலும், இனி அதே மரியாதை அளிக்கப்படாது. கூட்டணி கட்சிகளிடம் கருணாநிதியை விடவும் ஸ்டாலின் பெருந்தன்மையுடன் நடந்து வந்தார். துரை வைகோ பாஜகவுடன் பேசியது தெரிந்துவிட்டதால், நிச்சயமாக மதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார்.
துரை வைகோவின் ஆசை
ஆனால் வைகோவுக்கு கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதே விருப்பம். மகன் துரை வைகோவின் ஆசை கட்டுப்படுத்த முடியுமா என்பதே கேள்வி. கடைசி நேரத்தில் தொகுதி பங்கீட்டின் போது சிக்கல் வரலாம். அதேபோல் திமுக கூட்டணியில் மீண்டும் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பே இல்லை. 3 அல்லது 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும்.
4 தொகுதிகள்
சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியின் வெற்றியின் மிக முக்கியம். அதனை ஸ்டாலின் நன்றாக அறிவார். அதனால் கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும் என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சி என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications