அடுத்த பரபரப்பு.. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் வரும் 6 ஆம் தேதி தீர்ப்பு!
சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 6 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996-2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சைதாப்பேட்டையில் 3,360 சதுர அடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மாமியார் பெயரில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது பொன்முடி, சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு கட்டிடம் கட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையை முடித்து பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 2004 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதற்கு இடையில், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.இதில் சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் ஆகியோர் உயிரிழந்தனர். பொன்முடி உள்பட மற்ற 7 பேர் மீதான வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்ததது. இந்தநிலையில், இந்த வழக்கில் வரும் 6 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் வெளியாக இருக்கும் தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications