சென்னை ஐகோர்ட் நீதிபதி டீக்காராமன் இன்றுடன் ஓய்வு.. 23,243 வழக்குகளில் தீர்ப்பு அளித்தவர்!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். சென்னை ஐகோர்ட்டில் தனது 9 ஆண்டு பணி காலத்தில் 23,243 வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார் டீக்காராமன்.
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தான பத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என இவர் அளித்த தீர்ப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

டீக்காராமன்
நீதிபதி டீக்காராமன் கடந்த 1963 ஆம் ஆண்டு ஜூன் 9 அன்று பிறந்தார். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் வூர்ஹீஸ் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பையும், வேலூர் வூர்ஹீஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணிதத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் ராமானுஜம் நிறுவனத்தில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1988 ஆம் ஆண்டு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1988 நவம்பர் 11 அன்று பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் நிபுணத்துவம் பெற்று வழக்கறிஞராக பணி புரிந்து வந்த டீக்காராமன் 2004 ஆம் ஆண்டு நேரடி நியமனம் மூலமாக மாவட்ட நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
நீதிபதி டீக்காராமன்
கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றிய டீக்காராமன், தமிழ்நாடு மாநில விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராகவும், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் பதிவாளராகவும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளராகவும் பதவி வகித்தார்.
அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு அதன்பிறகு நிரந்தர நீதிபதியாக பணி அமர்த்தப்பட்டார். தற்போது 12-வது நீதிபதியாக பணிபுரிந்து வரும் நீதிபதி டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவரது மனைவி டாக்டர் மஞ்சுளா ராமன் தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
23 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணிக்காலத்தில் மொத்தம் 23,243 வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி டீக்காராமன். அவற்றில் சில வழக்குகளின் தீர்ப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததன.
வயதான பெற்றோர், தங்களது பிள்ளைகளின் பெயர்களில் சொத்துகளை எழுதி வைத்தபிறகு, அந்தப் பிள்ளைகள் பெற்றோரை கவனிக்காமல் விட்டுவிடும் சூழலில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவாய் கோட்டாட்சியரே அந்த தானப் பத்திரங்களை ரத்து செய்யலாம் என நீதிபதி டீக்காராமன் அளித்த தீர்ப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் சில முக்கிய தீர்ப்புகள்
அதேபோல ஜீவனாம்ச வழக்குகளில் கணவன்மார்களை நிராயுதபாணியாக விட்டுவிடக்கூடாது என்றும், கணவரின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே மனைவி, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என அவர் அளித்த தீர்ப்பும் முக்கியமானது.
மேலும், சரியாக படிக்கவில்லை என திட்டியதால் மனமுடைந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதற்காக ஆசிரியர்களை பலிகடாவாக ஆக்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி டீக்காராமன்.
திருமணமான ஆணுடன் வாழும் உறவை திருமண உறவுக்கு சமப்படுத்த முடியாது என்றும் ஒரு வழக்கில் தெரிவித்திருந்தார் டீக்கா ராமன். கருப்பை புற்றுநோய் காரணமாக மனைவியின் கருப்பையை அகற்றுவது மனரீதியான கொடுமையாக இருக்காது என்றும், இது விவாகரத்துக்கான காரணமாக கருதப்பட மாட்டாது என்றும் அவர் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications