எமர்ஜென்சி இருளை தந்தது இந்திரா.. பேரன் ராகுலை வைத்து புத்தக வெளியீடா?.. எத்தனை முரண்?.. அண்ணாமலை
சென்னை: தமிழகத்தின் இருண்டகாலம் எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டது என கூறிவிட்டு இந்தியாவில் எமர்ஜென்சியை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன் ராகுல் காந்தியை வைத்து புத்தகத்தை வெளியிட்டுள்ளீரே என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதை புத்தகமான உங்களில் ஒருவன் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
இந்த புத்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தது முதல் 1976 ஆம் ஆண்டு நடந்தது வரை 23 ஆண்டுகால விஷயங்களை எழுதியுள்ளார். நேற்று வெளியானது இந்த புத்தகத்தின் முதலாம் பாகம் ஆகும்.

21 மாதங்கள் எமர்ஜென்சி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை 21 மாதங்களுக்கு எமர்ஜென்சியை கொண்டு வந்தார். நாட்டில் நிலவிய அசாதாரண சூழலால் தேர்தலை தள்ளிப் போடும் நோக்கத்துடனும் குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும் இந்த எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மிசா சட்டம்
இந்திய வரலாற்றில் இந்த 21 மாத காலம் இருண்ட காலமாகவும் சர்ச்சை மிகுந்த காலமாகவும் வர்ணிக்கப்படுகிறது. இதற்கு மிசா என பெயர். அதாவது உள்நாட்டு பாதுகாப்பை உறுதிச் செய்யும் சட்டம் (The Maintenance of Internal Security Act). இந்த எமர்ஜென்சியின் போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுயசரிதை புத்தகம்
அந்த சம்பவம் குறித்து தனது சுயசரிதை புத்தகத்தில் ஸ்டாலின் எழுதியுள்ளார். அதாவது மிசா சட்டத்தை கொண்டு வந்தவர் இந்திரா காந்தி. அவர் கொண்டு வந்த சட்டத்தால் ஸ்டாலினை போல் ஏராளமானவர்கள் அப்போது கைது செய்யப்பட்டார்கள். அப்படியிருக்கும் போது இந்திராவின் பேரனை வைத்து புத்தக வெளியீட்டு விழாவா என பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தமிழகத்தின் இருண்டகாலம்
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு பாராட்டுக்கள். எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுலை வைத்து புத்தக வெளியீடு
திருமதி இந்திரா காந்தி அவர்கள் இதை செய்தார்! அவருடைய பேரன் திரு @RahulGandhi அவர்கள் பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்! திமுக - காங்கிரஸ் கூட்டணியை போல எத்தனை முரண்பாடுகள் இவர்களுடைய செய்கைகளில்! என தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications