இந்துத்துவா சித்தாந்தத்தை அதிமுகவில் திணிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?.. கேட்கிறார் கே.சி.பழனிசாமி!
சென்னை: அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்தை எடப்பாடி பழனிசாமி திணிக்கிறாரா என முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கையால் திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து கொண்டவர் கே.சி.பழனிசாமி. இவரை எம்ஜிஆரின் தத்து பிள்ளை என சொல்லும் அளவுக்கு புரட்சி தலைவருடன் நெருக்கம் காட்டி வந்தார்.

அவர் மறைந்ததும் ஜெயலலிதாவுக்கும் விசுவாசியாக இருந்தார். அவரது குட்வில் புக்கிலும் இடம் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைந்தவுடன் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இயங்கி வந்தார் கே.சி.பழனிசாமி.
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அதில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தவரும் கே.சி.பழனிசாமிதான். இவர் முன்னாள் எம்பியும் ஆவார். இவருக்கு டெல்லியில் சில தொடர்புகளின் உதவியுடன் தேர்தல் ஆணைய நிலவரங்களை கை விரல் நுனியில் வைத்துள்ளார்.
ஓபிஎஸ் செல்வாக்கு பெற்றிருந்த காலகட்டத்தில் கூட சட்டத்திட்டத்தின்படி அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார் கேசிபி. இவர் அந்த மனுவை கடைசி வரை வாபஸ் பெறவே இல்லை. எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் இணைந்த பிறகு கூட அந்த மனுவை வாபஸ் பெறாமல் புதுப்பித்தார்.
பொதுச் செயலாளர் பதவியே இல்லை. கூட்டுத் தலைமைதான் என முடிவு செய்த பிறகும் கூட கே.சி. பழனிசாமி தனது மனுவை திரும்ப பெறவே இல்லை. இவர் ஒரு முறை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினை. அதை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளிப்போம் என கூறினார்.
இதையடுத்து கே.சி. பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டார். அது முதல் அதிமுகவை எப்படியாவது மீட்க வேண்டும் என கே. சி. பழனிசாமியும் போராடி வருகிறார். ட்விட்டரில் அவ்வப்போது வாக்கெடுப்பு நடத்தி அதிமுக குறித்து தொண்டர்களின் மனநிலையை அறிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அதிமுக மாநாட்டு வீடியோவை வெளியிட்டு சில தகவல்களை கூறியுள்ளார்.
"நான் கடவுள்" என்று ஆரியா நடித்த படத்தில் இடம்பெற்ற அகோரி பாடலை பாடி அதிமுகவின் கடவுள் நான்தான் என்று பறைசாற்றுகிறாரா @EPSTamilNadu ? #அதிமுக வரலாற்றில் #எம்ஜிஆர் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டுவந்த கலாச்சாரம் தாண்டி இந்துத்துவா சித்தாந்தத்தை @AIADMKOfficial -வில் திணிக்கிறாரா… pic.twitter.com/XTXRLWtcMg
— K C Palanisamy (@KCPalanisamy1) August 20, 2023
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "நான் கடவுள்" என்று ஆரியா நடித்த படத்தில் இடம்பெற்ற அகோரி பாடலை பாடி அதிமுகவின் கடவுள் நான்தான் என்று பறைசாற்றுகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிமுக வரலாற்றில் எம்ஜிஆர் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டு வந்த கலாச்சாரம் தாண்டி இந்துத்துவா சித்தாந்தத்தை அதிமுகவில் திணிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி? இவ்வாறு தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications