K Rajan: பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை.. அடையாறு ஆற்றில் குதித்து விபரீத முடிவு!
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரையுலக நிகழ்வுகளில் தனது அதிரடியான பேச்சுகளால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவருமான கே.ராஜன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட கே.ராஜனுக்கு வயது 85.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தயாரிப்பாளர் கே.ராஜன் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன், தமிழ் திரையுலகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அடிக்கடி யூ டியூப் தொலைக்காட்சியில் பேட்டி அளித்து வந்தவர். கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கே ராஜன்
தமிழ் சினிமாவில் 1980-களில் இருந்து தீவிரமாக இயங்கி வந்தவர் கே.ராஜன். சுரேஷ் நடித்த 'பிரம்மச்சாரிகள்' (1983) திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். கணேஷ் சினி ஆர்ட்ஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்த இவர், அப்பாஸ் - குணால் நடித்த 'உணர்ச்சிகள்' உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, சினிமா வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றினார். இவரது மகன் பிரபுகாந்தும் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிப்படையாக பேசுபவர்
சினிமா ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா சந்திக்கும் சவால்கள், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள், நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் மற்றும் திரையுலகில் நிலவும் முறைகேடுகள் குறித்து எந்தவித ஒளிவுமறைவும் இன்றி, மேடைகளில் அதிரடியாகவும் நேர்மையாகவும் பேசி எப்போதும் செய்திகளில் இடம்பிடித்து வந்தவர் கே.ராஜன்.
85 வயதான மூத்த ஆளுமை ஒருவர் இத்தகைய துயரமான முடிவை தேடிக்கொண்டது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், சோக அலையையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குத் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications