பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை அறுக்கிறார் பிரதமர் மோடி.. கே எஸ் அழகிரி விமர்சனம்
சென்னை: பொதுத்துறை நிறுவனங்கள் விவகாரத்தில் பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் என தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்
சோளிங்கர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளை சார்ந்த பாஸ்டர்கள் உள்பட 500 பேர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், தமிழக அரசு சட்டபேரவையில் மூன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

விவசாயிகளுக்கு அடிப்படை விலை
புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு அடிப்படை விலை இல்லாத சூழல் ஏற்படும். தென்னிந்தியாவில் விவசாயிகள் ஒழுங்குமுறை கூடத்தில் வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஒழுங்குமுறை கூடம் இல்லாத சூழல் ஏற்படும். சமஸ்கிருதம்தான் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் மொழி என மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவை ஒருங்கிணைக்க
வெறும் 24 ஆயிரம் நபர்கள் மட்டுமே பேசி வருகின்ற ஒரு மொழி எப்படி இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அழகிரி சமஸ்கிருதம் மொழிக்கு 644 கோடி ரூபாயும் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் உட்பட நான்கு மொழிகளுக்கு சேர்த்து 22 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

பொதுத் துறை நிறுவனங்கள்
மேலும் லாபம் வழங்க கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை ஏற்று கொள்ள முடியாது. பொதுமக்களின் வரி பணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களை தனியாரிடம் விற்பனை செய்வதை கடுமையாக கண்டிக்கிறோம். பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிக பெரிய பாதிப்பிற்கு உள்ளாகும்.

கேள்விக்கான பதில்
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் கேள்வி எழுப்பினால் கேள்விக்கான பதிலை வழங்காமல் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பி வருகிறார். நிதித்துறை குறித்து தெரியாத நபர் நிதி அமைச்சராக உள்ளார். தமிழகத்தில் கலால் வரியை குறைத்த முதல்வர் ஸ்டாலின் திறமையானவரா ? இல்லை 7 வருடம் பெட்ரோல் விலை அதிகரித்துவிட்ட மோடி திறமையான பிரதமரா ? என கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications