இருப்பை காட்டிக் கொள்ளவே இன்னோவா கார் தருவோம்.. மோர் தருவோம்னு பாஜக சொல்றாங்க.. கே எஸ் அழகிரி
சென்னை: ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் திமுக கூட்டணியில் இணைந்தால் நிச்சயம் வரவேற்போம் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
வரும் 2021-ஆம் ஆண்டு அதாவது அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வரயிருக்கிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடையும்.
இந்த தேர்தல் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தலாகும். இதில் வெற்றி பெற்று மக்களின் செல்வாக்கு யாருக்கு என்பதை தெரிந்து கொள்ள அனைத்து கட்சிகளும் தற்போது முதலே வியூகங்களை வகுத்து வருகின்றன.

தமிழக காங்கிரஸ் கட்சி
இந்த நிலையில் தேர்தல் கூட்டணி குறித்தும், எத்தனை இடங்களில் போட்டி என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான்.

கொள்கைகள்
அவரை முன்னிறுத்தியே நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம். எங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு கட்சி தொடங்கவிருக்கும் நடிகர் ரஜினிகாந்தும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் இணைந்தால் நாங்கள் நிச்சயம் வரவேற்போம். இதில் மாற்று கருத்து இல்லை.

மோர் தருவோம்
தங்களுடைய இருப்பை காட்டிக் கொள்ளவே தேர்தலில் வெற்றி பெற்றால் இன்னோவா கார் தருவோம், மோர் தருவோம்னு பாஜகவினர் தெரிவித்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை ஸ்டாலினும் ராகுல்காந்தியும்தான் முடிவு செய்வார்கள். மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவித்தால் வரவேற்போம். இதன் மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்றார் கே எஸ் அழகிரி.

இன்னோவா கார்
தமிழக அரசியலில் 6 மாதத்தில் மாற்றம் ஏற்படும். அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கிறது. நாங்கள் கை காட்டுபவர்தான் ஆட்சிக் கட்டிலில் அமருவார். வரும் தேர்தலில் பாஜகவினர் தமிழக சட்டசபைக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்தலில் வெற்றியை தேடி தர உழைக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்னோவா கார் பரிசாக கொடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications