"திமுகவால்" எங்கள் வளர்ச்சி பாதிப்பு.. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்போது?.. கே எஸ் அழகிரி தடாலடி
சென்னை: திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அவர் அதில் கூறியதாவது: ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனை சோனியா காந்தி குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளார்கள்.
ஆனால் மக்களும் அப்படியே இருக்க வேண்டும் என நினைப்பது எல்லாம் தவறு. தன்னை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவையே காந்தியடிகள் மன்னிக்க சொன்னார். ஆனால் சட்டமோ அவரை தூக்கிலிட்டது.
திமுக கூட்டணிய விட்டு வெளியே வாங்க..! கழன்று ஓடும் காங்கிரஸ் நிர்வாகிகள்! கையை பிசையும் அழகிரி & கோ!
பேரறிவாளன்
அது போல்தான் பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்க முடியாத நிலை உள்ளது. தமிழர் என்பதற்காக அவரை விடுவிக்க வேண்டும் என சொல்லப்படுவதை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது. கொலை செய்த ஒருவரை நாம் எப்படி விடுவிக்கலாம்? தமிழகத்தில் கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட 500 முதல் 600 பேர் வரை 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் உள்ளார்கள்.
சிறை கைதிகள்
அந்த சிறை கைதிகளும் தமிழர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. ராஜீவ் கொலை வழக்கில் மேலும் 6 பேரை விடுவிக்க முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியெனில் 1998 கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டியதுதானே? அவர்கள் மீதான குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களை ஏன் விடுவிக்கக் கூடாது?
7 பேர் விடுதலை
7 பேர் விடுதலையில் திமுக மும்முரமாக இருந்தது தெரிந்துதான் திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவானது. அவர்களது கருத்துக்கு எங்கள் தரப்பில் இத்தகைய முரண்பாடு இருப்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் திமுகவும் எங்களுடன் கூட்டணியை தொடர்ந்தார்கள். பொதுவான ஒரு எதிரியை வீழ்த்துவதற்காக மாறுபட்ட கொள்கைகளை கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள்வது வழக்கமானதுதான்.
மதசார்பின்மை
அந்த வகையில் மதசார்பின்மை என்பதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. இந்த நிலையில் கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நான் தலைவரானவுடன்தான் நாடாளுமன்ற தேர்தல் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 72 சதவீத வெற்றி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் செல்வாக்கு
1991 ஆம் ஆண்டு எங்களுக்கு நிறைய செல்வாக்கு தமிழகத்தில் இருந்தது . ஆனால் அதை அதிமுக அறுவடை செய்தது. கூட்டணி என்பது ஒரு கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரஸை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்துவிட்டன.
காங்கிரஸ் வளர்ச்சி பெறவில்லை
தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்திவிட்டது என்பதுதான் உண்மை. கூட்டணி அமைத்து காங்கிரஸ் உரிய வளர்ச்சியை பெறவில்லை. காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் வலிமையாக இருந்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள். தமிழகத்தில் பல கட்சிகள் தோன்றியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான விஷயங்களுக்கு திட்டமிட வேண்டும். இதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அதன் பிறகுதான் காங்கிரஸை தமிழகத்தில் மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள் என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.