ஏலகிரி புரோகிராம் ரத்து! கதர்ச்சட்டையினர் அப்செட்! வேறு ஒரு தேதி குறிக்கும் காங்கிரஸ்!
சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான அரசியல் பயிற்சி முகாமை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி.
மூன்று நாள் புரோகிராமில் கலந்துகொள்வதற்காக ஆயத்தமான காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சித் தலைமையின் இந்த திடீர் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாகவே அரசியல் பயிற்சி முகாம் ரத்து செய்யப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார் கே.எஸ்.அழகிரி. இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது;

12 அமர்வுகள்
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் அரசியல் பயிற்சி முகாம் எனது தலைமையில் நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் 76 மாவட்டத் தலைவர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட 50 பயிற்சியாளர்கள் பங்கு பெறுவதற்கு திட்டமிடப்பட்டது. இப்பயிற்சி முகாமில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் தலைவர்கள், அரசியல், பொருளாதார அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுவதற்கு 12 அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வேறு தேதிகள்
ஆனால், கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருகிற நிலையில் தமிழக அரசு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுமென அறிவித்திருக்கிறது. இதன் காரணமாகவும், கொரோனா தொற்று பரவுகிற சூழலிலும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏலகிரியில் ஜனவரி 7, 8, 9 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்திருந்த அரசியல் பயிற்சி முகாம் ரத்து செய்யப்படுகிறது. அரசியல் பயிற்சி முகாமை வேறு ஒரு தேதியில் மீண்டும் நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

2 நாள் நிகழ்ச்சியாக
இதனிடையே 9-ம் தேதி ஞயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் 3 நாள் அரசியல் பயிற்சி முகாமை 2 நாள் பயிற்சி முகாமாக ஏற்கனவே திட்டமிட்ட 7 மற்றும் 8 தேதிகளில் வைத்திருக்கலாம் என்பது ஒரு சில நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பெரும்பாலான நிர்வாகிகள் கொரோனாவை காரணம் கூறி அரசியல் பயிற்சி முகாமை ஒத்தி வைக்கும் படி கேட்டுக்கொண்டதால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சி வளர்ச்சி
காங்கிரஸை தமிழகத்தில் எப்படி வளர்ப்பது, மக்களிடம் காங்கிரஸ் கொள்கைகளையும், அதன் தேவையையும் எவ்வாறு பரப்புரை செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி ஏலகிரியில் மூன்று நாட்கள் விரிவாக ஆலோசிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications