குஜராத்துக்கு மட்டும் தன்னை பிரதமராக நினைக்கிறார் மோடி... தமிழக காங்கிரஸ் சாடல்..!
சென்னை: குஜராத்துக்கு மட்டும் மோடி பிரதமரல்ல என்றும் நாட்டுக்கே பிரதமர் என்பதை அவர் மறக்கக்கூடாது எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை பொறுத்தவரை குஜராத்துக்கு அள்ளியும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குக் கிள்ளியும் கொடுப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கூட்டாட்சி
நிதி ஒதுக்குவதிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வரை, குஜராத்துக்கு அள்ளிக் கொடுப்பதையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குக் கிள்ளிக் கொடுப்பதையும் மத்தியில் ஆளும் மோடி அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகச் செயல்பட வேண்டிய பிரதமர் மோடி, தான் சார்ந்த குஜராத்துக்கு மட்டும் சாதகமாகச் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைப்பதற்குச் சமம்.

சி.ஏ.ஜி அறிக்கை
மோடி அரசின் இத்தகைய செயலை குஜராத் சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி (இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர்) அறிக்கையில் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டு வரை குஜராத்தில் திட்டங்களை செயல்படுத்தும் ஏஜென்ஸிகளுக்கு நேரடியாக மத்திய அரசு நிதி அனுப்பியுள்ளது. அந்த வகையில் 2015-16 ஆம் ஆண்டு ரூ.2,542 கோடியாக இருந்த நிதியின் அளவு, 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 11 ஆயிரத்து 659 கோடியாக உயர்ந்துள்ளது.

முன் மாதிரி
ஒரு சில நெருங்கிய தொழிலதிபர்களுக்கு மோடி அரசு சாதகமாக செயல்படுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இது உள்ளது. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி கார்பரேட்டுகளுக்கு சாதகமாகச் செயல்படுவதையே, 'பொருளாதார வளர்ச்சியில் குஜராத் முன்மாதிரி' என்று மோடி அரசால் முன்னிலைப் படுத்தப்படுகிறது.

திட்டக்குழு
பிரதமர் என்பவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவானவர். ஆனால், குஜராத்துக்கு மட்டும் பிரதமர் போல் செயல்பட்டு, அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு நிதியை நேரடியாக வழங்குவது, பதவிப்பிரமாணத்தின் போது அவர் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறும் செயலாகும். கூட்டாட்சி தத்துவத்தில் அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும். அதற்காகத்தான் திட்டக்குழுவை பண்டித நேரு உருவாக்கினார். இவற்றை எல்லாம் மாற்றி அமைத்து திட்டக்குழுவை ஒழித்து, தேசிய வளர்ச்சிக் குழுவை செயல்படாமல் மோடி அரசு முடக்கியது.

ஜனநாயகம்
தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாங்கள் சார்ந்த குஜராத் மாநிலத்துக்கு மட்டும் முன்னுரிமை காட்டுவது கூட்டாட்சி தத்துவத்துக்கே விரோதமானது. கூட்டாட்சி தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் செயலையும் தொடர்ந்து செய்து வரும் மோடி அரசு, அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும்.












Click it and Unblock the Notifications