தர்மம் தழைக்க விரும்பினேன்! பொறுப்புகளில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியே! EPS-க்கு செங்கோட்டையன் பதில்
சென்னை: என்னை பொறுப்புகளில் இருந்து நீக்கியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அவர் தெரிவித்ததால், அவரை எடப்பாடி பழனிசாமி கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என நினைத்தோம். அது போல் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என எண்ணினேன்.

ஆனால் என்னை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதனால் எனக்கு வேதனை இல்லை, மகிழ்ச்சியே என தெரிவித்திருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், செங்கோட்டையன் கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதற்கான காரணம்
கட்சி ஒற்றுமை குறித்து செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு விடுத்த 10 நாள் கெடு மற்றும் "மறப்போம், மன்னிப்போம்" என்ற கொள்கையின் அடிப்படையில் பிரிந்தவர்களை இணைக்க தானும் நடவடிக்கை எடுப்பதாக அவர் பொதுவெளியில் பேசியதே இந்த நீக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் எனக் கருதப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இதற்காக இன்று காலை திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது உள்கட்சி விவகாரங்களை வெளியே பேசினால் நடவடிக்கை என்ற எச்சரிக்கையும் சட்டதிட்டங்களும் உள்ள நிலையில் செங்கோட்டையன் இப்படி பேசியதை ஏற்க முடியாது.
மேலும் கட்சித் தலைமைக்கே ஒரு மாவட்டச் செயலாளர் கெடு விதிப்பதா? இதை பார்த்துக் கொண்டிருந்தால் நாளை அடுத்தடுத்து கிளை செயலாளர், வட்டச் செயலாளர் என பேசத் தொடங்கிவிடுவார்கள். இதனால் கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்படும் என சீனியர் நிர்வாகிகளிடம் அவர் கொந்தளித்தாராம்.
இதன் பிறகுதான் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அத்துடன் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்த நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செங்கோட்டையன் தன்னை பதவியிலிருந்து நீக்கியது மகிழ்ச்சி என்றாலும் கூட ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடனும் ஆதரவாளர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.












Click it and Unblock the Notifications