டேய்.. உருப்பட மாட்டீங்கடா நீங்கெல்லாம்.. காடுவெட்டி குருவின் தாயார் கண்ணீர், ஆவேசம்
காடுவெட்டி குருவின் அம்மாவின் வீடியோ பேச்சு வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: "உங்களுக்கு நாங்க என்னடா பாவம் செய்தோம்.. நீ துரோகம் பண்ணிட்ட.. உருப்படவே மாட்டாய்... என் குடும்பத்தை அழித்த நீங்கள் நல்லா இருக்க மாட்டீங்கடான்னு.." என்று உரத்த குரலில் சாப வார்த்தைகளாக கேட்கிறது அந்த வீடியோவில்!!
காடுவெட்டி குருவின் அம்மாவின் வார்த்தைகள்தான் இவை எல்லாம். குரு இறந்ததிலிருந்தே அந்த குடும்பத்தில் என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை. பிரச்சனைமேல் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது.
முதலில் குருவின் மனைவி, சொத்துக்காக என் பிள்ளைகளை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கறாங்க, அவங்களோடு என்னை சேர்த்து வையுங்கள் என்று கடிதம் ஒன்று வெளிவந்தது. காடுவெட்டி குரு வீட்டில் பிரச்சனை என்று முதல்முறையாக வந்தபோது எல்லோருமே ஷாக் ஆனார்கள். அடுத்ததாக கடிதம் போய் வீடியோ ஒன்று வெளிவந்தது.
[யார் தடுத்தாலும் சனிக்கிழமை சபரிமலை செல்வேன்: திருப்தி தேசாய்]
மாறி மாறி புகார்
இதில் குருவின் மகன் கனலரசன் பேசியிருந்தார். என் அம்மாவை சொந்தக்காரங்க கிட்ட இருந்து மீட்டு தாங்க, எங்கே இருக்கிறாங்கன்னே தெரியலை என்று கூறி டாக்டர் ராமதாசுக்கே நேரிடையே வேண்டுகோள் விடுத்தார். ஒரு பக்கம் பிள்ளைங்க கிட்ட இருந்து என்னை பிரிக்க பாக்கறாங்க என்று அம்மாவும், என் கிட்ட இருந்து அம்மாவை பிரிக்க பாக்கறாங்கன்னு பிள்ளையும் மாறி மாறி புகார் அளிக்கவும் விவகாரம் பெரிதாகிவிட்டது.
கண்டமேனிக்கு திட்டினார்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சூடு கிளம்பியுள்ளது. இதுவும் ஒரு வீடியோ காட்சிதான். இதில் காடுவெட்டி குருவின் அம்மா கல்யாணி அம்மாள் பேசியிருக்கிறார். மற்றவர்கள் இருவரும் குடும்ப உறுப்பினர்களை குற்றம் சொல்லி புகார் சொல்லி குற்றஞ்சாட்டியிருந்தார்கள். ஆனால் கல்யாணி அம்மாள், பாமக மாநில துணை செயலாளர் வைத்தியையே நேரிடையாகவே கண்டமேனிக்கு திட்டி உள்ளார்.
ஏன் தடுக்கிறே?
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: "கட்சி கட்சின்னு சொல்லி என் மகன் குருவை அழிச்சிட்டீங்க. இப்போ எதுக்குடா என் பேரனை கூப்பிடறே? என் பிள்ளையால்தானே நீங்கள் எல்லாம் கட்சிக்கு வந்தீங்க. இப்போ எல்லோரும் மூணு வீடு, நாலு வீடுனு கட்டிக்கிட்டு, காசு, பணம்னு வாழறீங்க. நாங்க மட்டும் கடனில் இருக்கணுமா? அடுத்தவங்க எங்க குடும்பத்துக்கு செய்ற உதவியை ஏண்டா தடுக்கறீங்க? யார் உதவி பண்ண வந்தாலும் குடுக்காதீங்க... குடுக்காதீங்க.. அவங்க நிறைய வெச்சிருக்காங்கன்னு ஏன் சொல்றீ?
உருப்பட மாட்டே
என் குடும்ப நிலவரம் உனக்கு தெரியும். என் குடும்பத்துக்கு தீங்கு ஏன் நினைக்கிறே? உன் குடும்பத்துக்கு நாங்க தீங்கு நினைச்சிருக்கோமா? உனக்கெல்லாம் நாங்க என்ன பாவம் பண்ணோம்? எங்களுக்கு தர வேண்டிய காசை நீ தந்தியா? எங்களுக்கு துரோகம் பண்ணின நீ உருப்படவே மாட்டே.. என் பையனோட பேரை வச்சு கோடி கோடியா கொள்ளையடிச்சவன்டா நீ.
நீ நல்லா இருப்பியா?
என் பையன் செத்த அன்னைக்கு உன்னை எல்லாம் பாத்தது. இப்போதான் வர்றே.. என் பையனை புதைச்ச இடத்துக்கு ஏதாவது செஞ்சீங்களா? ஏதாவது கட்டினீங்களா? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.. இன்னைக்கு வைத்தின்னு பேர் எடுத்திருக்கிறது என் புள்ளையால... என் மகன் செத்து ஒரு வருஷம் ஆகுறதுக்குள்ள உங்களை எல்லாம் பலி தீர்ப்பான்.. என் குடும்பத்தை அழித்த நீங்கள் எல்லாம் நல்லவே இருக்க மாட்டீங்கடா"... என்று வேதனையில் பேசி தலையில் அடித்துக்கொண்டு சாபமிட்டார் கல்யாணி அம்மாள்.
பாமக தரப்பு அதிர்ச்சி
பாமக நிர்வாகிகள் சுற்றியிருக்க, வைத்தியை முன் உட்கார வைத்து நேருக்கு நேர் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார் கல்யாணி அம்மாள். இந்த வீடியோதான் தற்போது பாமக தரப்பில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.