கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. ஆவணங்கள் இல்லாத இல்லத்தரசிகளுக்கும் ரூ. 1000.. முதல்வர் அறிவிப்பு
சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இத்திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது.
5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது. பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறப்பு முகாம்களை நடத்தி கூட்ட நெரிசல் இன்றி ஆவணங்களைப் பெற வேண்டும் என்று கூறினார். மகளிருக்கு மகுடம் சூட்டும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் " கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் ஆட்சித்தலைவர்களான உங்களின் பங்கு முக்கியமானது. ஒரு திட்டத்தை தொடங்குவது பெரிய விசயமில்லை அதை திறமையாக செயல்படுத்த வேண்டும். ஆவணங்களுக்காக காத்திருக்காமல், ஆவணங்கள் இல்லாத இல்லத்தரசிகளுக்கும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த திட்டம் அண்ணாவின் பிறந்ததினமான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இன்னும் 2 மாதகாலமே உள்ளதால் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு திட்டம் வெற்றிகரமாக செயல்பட உறுதுணையாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications