மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்.. 45 நாளில் பெற மக்கள் அறிய வேண்டியவை
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க வசதியாக வீடு வீடாக இன்று முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முதல் முகாம் ஜூலை 15ல் தொடங்குகிறது. இந்த முகாமினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் நடைபெற உள்ளது. இதில் இதுவரை மகளிர் உரிமை தொகை கிடைக்கப்பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் ஜூலை 15-ம் தேதி முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் 46 வகையான சேவைகளை மக்கள் பெறலாம் என்றும் இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதல்வர் தொடங்கி வைக்கிறார்
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், 15.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளன.
விண்ணப்பம் எப்படி
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று நேரடியாகச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
45 நாளில் 1000 ரூபாய்
இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் அரசு அறிவித்துள்ளது.
எத்தனை முகாம்கள்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது, இந்த முகாம் பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கடைகோடி மக்களுக்கும் அரசின் சேவை, திட்டங்களை அவர்களது பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்படுவதாக கூறியுள்ள அரசு, விண்ணப்பித்த மகளிருக்கு 45 நாளில் மகளிர் உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறியுள்ளது.
யாருக்கு எல்லாம் தளர்வு
இந்த முறை , கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 3 முக்கிய தளர்வுகளை தமிழக அரசு அளித்து திட்டத்தின் பயனை விரிவுபடுத்தி இருக்கிறது. அதன்படி, அரசுத்துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். அதேபோல் அரசு மூலமாக மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
விதவை ஓய்வூதியம்
மேலும் இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்க முடியும். கணவரால் கைவிடப்பட்ட 50 வயதுக்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்க முடியும்.












Click it and Unblock the Notifications