கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. 11 லட்சம் பேருக்கு குட் நியூஸ்.. எஸ்எம்எஸ் வந்துச்சா.. தீபாவளி பரிசு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறுவதற்கு மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 10ஆம் தேதி முதல் வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை சுமார் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அனைவருக்கும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அவர்களின் வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக விண்ணப்பம் அளித்து பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பலரும் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதலே மேல்முறையீடு செய்து வந்தனர். அக்டோபர் 25ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்துள்ளனர். எனவே செப்டம்பர் மாதம் மட்டுமல்லாமல் அக்டோபர் மாத பட்டியலிலும் மேல்முறையீடு செய்தவர்களின் பெயர் வராமல் போனது. இதுவரை சுமார் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மேல்முறையீட்டு மனுக்கள் மீதான நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. கோட்டாட்சியர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மேல்முறையீடு செய்தவர்களில் 8 லட்சம் பேர் ரூ.1000 உரிமைத் தொகை பெற தகுதிவாய்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் இன்று முதல் எஸ்எம்எஸ் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 14ஆம் தேதியே பயனாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டது. இந்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் மக்களின் வசதிக்காக முன்கூட்டியே உரிமைத் தொகையை வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு மகளிர் தங்கள் செலவுகளை செய்ய வசதியாக முன்கூட்டியே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட இருக்கிறது. வழக்கமாக 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் தீபாவளி 12 ஆம் தேதி வருவதால் 10ஆம் தேதிக்குள் பணத்தை வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். புதிதாக ரேசன் கார்டு பெற்றவர்களும் தகுதிவாய்ந்தவர்களும் 1000 ரூபாய் பெற விண்ணப்பம் செய்யலாம் என்று சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications