மகளிர் உரிமைத்தொகை: வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு ரூ.1000 கிடைக்குமா? ஜெ.ராதாகிருஷ்ணன் பதில்
சென்னை: கலைஞர் மகளிர் திட்டத்தை செயல்படுத்த மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்கள்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட திட்டங்களில் ஒன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். இந்த திட்டம் மகளிர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இத்திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் உரிமை தொகை திட்டம் பெறுவதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது.
பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும். வீடுகளில் சொந்தமாக கார் இருக்கக் கூடாது" உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறப்பு முகாம்களை நடத்தி ஆவணங்களைப் பெற வேண்டும் என்று கூறினார்.
மகளிருக்கு மகுடம் சூட்டும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் " கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாநகராட்சிஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்கள். இந்த திட்டத்தை பெற விரும்பும் பயனாளிகளுக்காக விண்ணப் படிவம் வழங்கப்பட உள்ளது. தற்போது விண்ணப்பப் படிவம் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வீடு வீடாக வழங்கவும் , விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு திரும்பி வாங்கவும் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட இருக்கிறோம். ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு முகாம்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், அரசு அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். விண்ணப்ப படிவங்களை கொண்டு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க ஒரு நாளைக்கு ஒரு ரேஷன் கடைக்கு 50 முதல் 60 பேர் வரையில் வரவழைத்து விண்ணப்பம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். தமிழக அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்படும். ரேஷன் அட்டைகள் இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் ரேஷன் அட்டை கிடைக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி கணக்கு இல்லை என்றாலும் புதிய வங்கி கணக்கு தொடங்கி அவர்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையான பயனாளிகள் விட்டுப்போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications