உரிமை தொகை ரூ.1000! "சிக்கலா இருக்கே.." அப்ளை செய்தும் கிடைக்கவில்லை.. அப்ளை செய்வதிலேயே பிரச்னை வேற
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் இப்போது மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் மேஜர் பிரச்சினை இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்குத் தேர்தல் சமயத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்து. இதற்கிடையே இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த அறிவிப்பு இந்தாண்டு பட்ஜெட்டில் வெளியானது.

அதன்படி ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டன. அவர்களுக்கு ஏற்கனவே மாதம் ரூ.1000 வழங்கப்பட்டுவிட்டது. இதில் நிராகரிக்கப்பட்டோர் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமை தொகை: இருப்பினும் அதில் இந்த ஒரு பிரிவினருக்கு மட்டும் பெரிய சிக்கல் இருக்கிறதாம். அதாவது சென்னையில் மட்டும் சுமார் 4,000 திருநங்கைகள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பணம் கிடைக்க ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "பெரும்பாலான திருநங்கைகள் யாசகம் பெற்றே வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
அப்படியிருக்க இந்த மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை பெரியளவில் உதவும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம்.. ஆனால் பலருக்கும் இன்னும் இந்த பலன்கள் கிடைக்கவில்லை. 21 வயது பூர்த்தியாகவில்லை என்பதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகப் பலருக்கும் மெசேஞ் வந்துள்ளது" என்கிறார்கள்.
பிரச்சினை: தண்டையார்பேட்டை பகுதியில் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, மாற்றுத்திறனாளிகளுக்கான 'ஸ்மார்ட் கார்டு' மூலம் விண்ணப்பித்த 688 பேரில், 13 பேருக்கு மட்டுமே ரூ 1,000 உரிமை தொகை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருநங்கை விழிகள் அமைப்பு சார்பில் சென்னை கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பலருக்கும் நீங்கள் 21 வயதுக்குட்பட்டவராக உள்ளதால் நீங்கள் உரிமை தொகை பெறத் தகுதி பெற மாட்டீர்கள் என மெசேஜ் வந்துள்ளது. மேலும், பலர் விண்ணப்பிக்கும் போதே இடர்பாடுகளைச் சந்தித்துள்ளனர். அதாவது விண்ணப்பத்தில் 'ஆண்' மற்றும் 'பெண்' என இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாகவும், 'மூன்றாம் பாலினம்' என்ற ஆப்ஷன் இல்லை என்பதால் விண்ணப்பிக்க முடியாது என்றும் இ-சேவை மையங்களில் இருப்போர் சொல்வதாகவும் புகார்கள் வருகிறது. சென்னை முழுக்க பரவலாக இந்த புகார்கள் வந்துள்ளது.
இப்போது தீர்வு: இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும் இப்போது மூன்றாம் பாலினத்தவர் என்ற ஆப்ஷன் விண்ணப்பத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து மாவட்டத்தின் முதல் திருநங்கை அலுவலரான எம்.ராதா கூறுகையில், "பயனாளிகள் இப்போது மீண்டும் விண்ணப்பிக்கலாம். இப்போது மூன்றாம் பாலினத்தவர் என்ற ஆப்ஷனை சேர்த்துள்ளோம்.
மேலும், ஸ்மார்ட் கார்டு மூலம் விண்ணப்பித்தவர்களைப் பார்க்கும் போது, 2020க்கு பிறகு விண்ணப்பித்தோருக்குப் பிரச்சினை இல்லாமல் உரிமை தொகை கிடைக்கிறது.. ஆனால், 2020 அல்லது அதற்கு முன்பு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும் பிரச்சினை இருக்கிறது. எனவே, அவர்கள் ஸ்மார்ட் கார்டுக்கு பதிலாக ஆதார் அல்லது பிறப்புச் சான்றிதழ்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அப்போது பலன் பெற முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
மற்றொரு சிக்கல்: இதில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. அதாவது விதிகளின்படி திருமணமாகாத பெண்கள், விதவைகள் மற்றும் திருநங்கைகள் குடும்பங்களுக்கும் இந்த உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் விதிகளின்படி திருநங்கைகளுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படும். ஆனால், திருநம்பிகளுக்கு இந்த உரிமை தொகை கிடைக்காது.
திருநங்கைகள் என்போர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள். அதேநேரம் திருநம்பிகள் என்போர் பெண்ணாக இருந்து ஆண்களாக மாறியவர்கள் ஆவர். இந்தியாவைப் பொறுத்தவரைத் திருநங்கைகளும் சரி, திருநம்பிகளும் சரி பெரும்பாலும் வீடுகளில் இருந்து வெளியேறித் தனித்தே வசிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இரு தரப்புக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் தங்கள் வாழ்க்கை மேம்படும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications