மகளிர் உரிமைத் தொகை: இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? இனி முகாம் நடக்குமா? வெளியான தகவல்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் மிகவும் கவனம் பெற்ற அறிவிப்பாக இது இருந்தது. திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை விமர்சித்து வந்தது.

ஒருபக்கம் மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இத்தகைய சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, இதனை பெற தகுதி வாய்ந்த பெண்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டது.
இதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபற்றது. இந்த விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பிறகும் விடுபட்ட நபர்களுக்காக நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, விண்ணப்ப முகாம்கள் நடைபெற்று முடிந்தன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது.
எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை எனவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகளுக்கு தகுந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications