ரெடியாக இருங்க! வருகிறது கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. ஒரு லட்சம் பயனாளிகள்! தமிழக அரசு மேஜர் அப்டேட்
சென்னை: "கலைஞர் கனவு இல்லம்" திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயனாளிகளை வரும் 25 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கெல்லாம், நிரந்தரமாக வீடு கட்டித் தரும் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், கடந்த 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து , கடந்த 2010- ம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் விதமாக , "கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்" புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் படி ஊரகப் பகுதிகளை குடிசைகள் இல்லாமல் மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இதன் நோக்கமாகும். அந்த வகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிராமப் பகுதிகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது
"குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதற்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் கோடி செலவில் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன்பெறலாம் என விதிமுறைகள் வெளியானது. இதன்படி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் நிலம் இருப்பது அவசியம். அதில் 300 சதுர அடி கான்கீரிட் கட்டிடம் கட்ட வேண்டும். இந்த வீட்டின் சுவர் மண்சுவர் மற்றும் மண் சாந்து மூலம் கட்டப்படக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள். புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது. சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற குடிசை வீடுகளில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் ரூ.3.5 லட்சம் பணம் வீடு கட்ட கிடைக்கும். குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு இருந்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி வீடு கட்ட கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி வழங்கப்படும்.
பயனாளிகளுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கீட்டு தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அதில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.
இந்த நிலையில் தான் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பயனாளிகளை வரும் 25 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதிக்குள் வீடுகளை கட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊரக பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் குறைவாக குடிசைகள் இருக்க கூடிய 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வீடு கட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை தொடங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications