கலைமாமணி விருதை காணோம்.. பணமும் போச்சே.. வீட்டின் உரிமையாளர் மீது கஞ்சா கருப்பு குற்றச்சாட்டு!
சென்னை: தமிழக அரசால் வழங்கப்பட்ட கலைமாமணி விருது, பணம், பொருட்களை காணவில்லை என்று நடிகர் கஞ்சா கருப்பு வீட்டின் உரிமையாளர் மீது குற்றம்சாட்டியுள்ளார். முறையாக வாடகை கொடுத்துவிட்டதாக கூறிய அவர், கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறும் ஆடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் கஞ்சா கருப்பு. 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர், சென்னையில் மதுரவாயல் பகுதியில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில், இந்த வீட்டில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் தரப்பில் தனது வீட்டை நடிகர் கஞ்சா கருப்பு லாட்ஜாக மாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு காவல்துறையினருடன் தனது வீட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில், கலைமாமணி விருது, ரேஷன் கார்டு, பணம், பொருட்கள் எல்லாம் காணவில்லையே.. அய்யோ.. போச்சு.. வீட்டு ஓனர்ணா என்ன வேண்டும்னாலும் பண்ணுவாங்களா.. என்று புலம்புகிறார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கஞ்சா கருப்பு பேசுகையில், நான் மிரட்டல் விடுத்ததாக வீட்டின் உர்டிமையாளர் கூறும் ஆடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் பணமே கொடுக்கவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறுகிறார். ஆனால் நான் ரூ.40 ஆயிரம் கடந்த மாதம் கொடுத்துள்ளேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
வீட்டின் சாவி என்னிடம் இருக்கும் போது, வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் பெற்ற கலைமாமணி விருதினை காணவில்லை. ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புக், ஆதார் கார்டு என்று எதையும் காணவில்லை. நான் எனது வாடகை பணத்தை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டேன்.
அதனை மீறி வீட்டின் கதவை உடைத்து உரிமையாளர் அடாவடியாக நடந்து கொண்டுள்ளார். எந்த வீட்டின் உரிமையாளராவது வாடகை கொடுத்த வீட்டின் கதவை உடைத்து திருடுவார்களா? நான் குடும்பத்துடன் தான் இங்கு இருந்திருக்கிறேன். விபச்சாரம் செய்யவில்லை எனது பொருட்களை காணவில்லை. கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறும் ஆடியோ, என்னை போலவே யாரையோ வைத்து பேசி சித்தரிக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications