மகளிர் உரிமை தொகை.. ரூ. 1000 வங்கி கணக்கிற்கு வர வேண்டுமா? அப்போ உடனே போஸ்ட் ஆபிஸ் போங்க
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் அளிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் இந்த திட்டம் தொடர்பான முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. இதுவரை ஒரு கோடியே 75 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விண்ணப்பப் பதிவு முன்னேற்றம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்கள்.
அரசாணை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் கீழ் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் ஒய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும், இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.
மாற்றம்: வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்க ஆணையிடப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு முதியோர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூபாய் 1200-ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டது.
ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்ததால், அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார்.
முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்றும் அரசு கருதுகிறது. அதேவேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உள்ள உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பங்கள்: இதற்காக விண்ணப்பங்கள் பெறக்கூடிய சிறப்பு கூட்டம் ஆகஸ்ட் 17- 20ம் தேதி வரை நடந்தது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் அளிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் இந்த திட்டம் தொடர்பான முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட வங்கி கணக்கு அவசியம். ஆனால் பல லட்சம் பேரிடம் தனியாக வங்கி கணக்கு இல்லை. இதை சரி செய்வதற்காக தமிழ்நாடு அரசு அதிரடியான திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி அருகில் உள்ள போஸ்ட் ஆபிசில் ஆதார் கார்ட், பான் கார்ட் மூலம் எளிதாக இ கேஒய்சி செய்தி வங்கி கணக்கை தொடங்க முடியும் .
இதற்கான முகாம், சிறப்பு ஏற்பாடு இன்றில் இருந்து தொடங்கி உள்ளது. அதன்படி வங்கியில் சென்று உரிமை தொகைக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று கூறினால் 20 நிமிடத்தில் இ கேஒய்சி முறையில் உடனே வங்கி கணக்கு தொடங்கி தரப்படும்.












Click it and Unblock the Notifications