கலாஷேத்ரா பாலியல் விவகாரம்..கட்டு கட்டாக 100 மாணவிகள் புகார்.. மகளிர் ஆணைய தலைவி குமாரி பகீர்
சென்னை: கட்டுக்கட்டுக்காக நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்துள்ளதாக கலாஷேத்ரா கல்லூரியில் விசாரணை மேற்கொண்ட மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ் குமாரி கூறியுள்ளார். கலாஷேத்ரா கலை கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் குற்றம் சாட்டினர். புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர். பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மாணவிகள் கூறவே கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பேச்சு வார்த்தை
இதனையடுத்து கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். எனினும் விடிய விடிய போராட்டம் நீடித்தது. இந்நிலையில், பாலியல் கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்தும் இதுவரை புகார் வரவில்லை எனவும் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மு.க ஸ்டாலின் உறுதி
கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கலாஷேத்ரா விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான புகார்கள் எதுவும் வரவில்லை. இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மகளிர் ஆணையம் விசாரணை
இதைத்தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார். 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவி, மாணவிகள் நான்கு பேர் மேல் புகார் கூறியுள்ளனர். நான் அறிக்கை கொடுத்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறேன். மாணவிகள் கட்டுக்கட்டாக புகார் அளித்துள்ளனர். நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

100 பேர் கட்டுக்கட்டாக புகார்
2008 முதல் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக புகார் அளித்துள்ளனர். விடுப்பில் இருந்த சில மாணவிகளிடம் வீடியோ காலில் பேசினேன். அவர்களின் கருத்துக்களை அறிக்கையாக அரசிடம் வழங்குவேன். மாணவிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலாஷேத்ரா விவாகரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். 4 பேர் மீது 100 மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளனர். அவர்கள் கட்டுக்கட்டாக புகார் அளித்துள்ளனர். இதனை அரசிடம் அறிக்கையாக கொடுக்க உள்ளேன். மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளோம். அவர்கள் போராட்டத்தை கை விட்டு விட்டு தேர்வு எழுதுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications