முடிவுக்கு வந்த 31 மணி நேர கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம்! தற்காலிக வாபஸ் என அறிவிப்பு! அடுத்து என்ன
சென்னை: சுமார் 31 மணி நேரமாக கலாஷேத்ரா மாணவிகள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதியை ஏற்றுத் தற்காலிகமாகப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்னை அடையாறில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்லூரி உள்ளது. இந்த ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் கற்பிக்கப்படுகிறது.
இந்த கல்லூரியில் தான் மாணவியருக்குப் பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினார்.

போராட்டம்
இந்த போராட்டம் இரண்டு நாட்களாக நடந்தது. பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் தொடர்ந்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் சமூக வலைத்தளங்களிலும் மாணவிகளுக்கு ஆதரவான ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைக் கண்டித்து கலாஷேத்ராவில் பயிலும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வருக்குக் கடிதம்
பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் வலியுறுத்துகின்றனர். மேலும், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதினர்.

நேரடியாக விசாரணை
இந்தச் சூழலில், கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரடியாகச் சென்ற மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் வரை இந்த விசாரணை நடந்த நிலையில், அவர் பல்வேறு மாணவிகளுடன் பேசினார். மேலும், விடுமுறையில் ஊருக்குச் சென்ற மாணவிகளிடம் வீடியோ கால் மூலமும் பேசியுள்ளார். 2008 முதல் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக மாணவிகள் கூறியதாகத் தெரிவித்த அவர், விரைவில் இது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

போராட்டம் வாஸ்
மாணவிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 4 பேர் மீது 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் போராட்டத்தை கை விட்டு விட்டுத் தேர்வு எழுதுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி அளித்த உறுதியைத் தொடர்ந்து மாணவிகள் இப்போது உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications