கள்ளக்குறிச்சி.. 2வது பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்தது என்ன? கோர்ட்டில் "எக்ஸ்பர்ட்" சொன்ன தகவல்
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை இரண்டாவது முறை பிரேத பரிசோதனை மேற்கொண்ட குழுவில் இருந்த தடயவியல் நிபுணர் சாந்தகுமார் மீது மாணவியின் பெற்றோர் தரப்பு புகார் வைத்துள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை விடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் மாணவியின் பெற்றோர் தரப்பு தங்களுக்கு தெரிந்த ஒரு மருத்துவரும் பிரேத பரிசோதனையில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உச்ச நீதிமன்றமும் இதை விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்றத்தை நாட கோரியது.
இந்த நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனையில் பெற்றோர் தரப்பு மருத்துவர் ஈடுபட அனுமதிக்கப்பட முடியாது என்று உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டது. முன்பு சொன்ன தீர்ப்பை மாற்ற முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார்.

தடயவியல் நிபுணர்
இன்று வழக்கு விசாரணையின் போது, இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொண்ட குழுவில் இருந்த தடயவியல் நிபுணர் சாந்தகுமார் மீது மாணவியின் பெற்றோர் தரப்பு புகார் வைத்தது. அவர் மீது ஏற்கனவே வேறு சில புகார்கள் இருப்பதாக மாணவி தரப்பினர் புகார் அளித்து இருந்தனர். இதையடுத்து இன்று தடயவியல் நிபுணர் சாந்தகுமாரை அழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். இரண்டாவது பிரேத பரிசோதனை எப்படி செய்யப்பட்டது.

புகார்
அதில் எதுவும் மாற்றங்கள் இருந்ததா என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த சாந்தகுமார், இரண்டு பிரேத பரிசோதனையில் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுக்கும் எந்த முரண்பாடும் இல்லை. எல்லா வீடியோவும் இருக்கிறது. இரண்டாவது பிரேத பரிசோதனையில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, என்று வாக்குமூலம் கொடுத்தார்.

நீதிபதி என்ன சொன்னார்?
இதையடுத்து நீதிபதி பேசிய போது, மாணவியின் உடல் 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறது. மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் ஏன் இவ்வளவு தாமதம். உடலை பெற்றுக்கொள்ளுங்கள். 45 நிமிடத்தில் உங்கள் முடிவை சொல்லுங்கள். நீதிமன்றத்தை நம்பாமல் வாட்ஸ் ஆப்பை நம்புகிறீர்களா? வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம், என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒரே அறிக்கை?
இரண்டு பிரேத பரிசோதனைகளுக்கு இடையில் வேறுபாடு இல்லை என்று கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவியின் முதல் பிரேத பரிசோதனை, இரண்டாம் பிரேத பரிசோதனை முடிவுகள் ஒன்றாக வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மாணவியின் முதல் உடற்கூறாய்வு அறிக்கையில், அவருக்கு தலையில், மூக்கில், தோள்பட்டையில் அடிபட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவரின் ஸ்கூல் யுனிபார்மில் மேலாடை, கால் சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்த கறை இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

காயம்
மார்பு பகுதி, கை பகுதி ஆகியவையும் உடைந்து இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இடது தலை பகுதி உடைந்து இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரின் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் புதிய காயங்கள்தான். பழையது கிடையாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிக அளவில் ரத்தம் வெளியேறியது, காயங்கள் காரணமாக ஏற்பட்ட ஷாக் ஆகியவைதான் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications