கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கு சிபிஐ வசம் போகிறதா? நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை ஹைகோர்ட்
சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த மனு மீதான உத்தரவை நாளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 70 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில்தான் சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. விஷசாராயம் மரணம் தொடர்பான வழக்கை காவல்துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது. அதனால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்தநிலையில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications