‛‛மெத்தனால் சப்ளையர் இவர்தான்’’.. கள்ளச்சாராய வழக்கில் சென்னையில் முக்கிய குற்றவாளி கைது! யார் இவர்?
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் பலியான நிலையில் 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் தான் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மெத்தனால் சப்ளையரை சென்னையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் அவர் யார்? என்பது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 18 ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த நிலையில் உடல்நலக்குறைவால் மறுநாளில் இருந்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இன்று காலை வரை மொத்தம் 57 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 157 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதில் 17 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 107 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த கள்ளச்சாராய மரணம் மற்றும் பாதிப்பு விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், விஜயா, தாமோதரன், ஜோசப் ராஜா, முத்து, சின்னத்துரை, மாதேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின்போது மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதும், புதுச்சேரி மற்றும் சென்னையில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பபட்டதும் தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் சிக்கிய மாதேஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் கொண்டு வரப்பட்டு கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இத்தகைய சூழலில் தான் மாதேஷ் கொடுத்த தகவலின்பேரில் மெத்தனால் சப்ளை செய்ததாக சிவக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிவக்குமார் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தான் சென்னையில் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனாலை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பிதாக கூறப்படுகிறது. தற்போது சிவக்குமாரை மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இன்று சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications