கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு.. தாயாரின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல.. போலீஸார் வாதம்
"சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை. கொலை குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி மறைத்துள்ளது"
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாயார் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த வந்த மாணவி, கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பெற்றோர் கூறியதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மாணவியின் தாயார் செல்வி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை. கொலை குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி மறைத்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் தங்களுக்கு காட்டப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சம்பவம் நடந்த இடம், ஆதாரங்கள் என அனைத்தும் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, எனது மகளின் மரண வழக்கை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என மாணவியின் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிலுவையில் இருப்பதால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" என வாதிட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவியின் தாய் தாக்கல் செய்த மனுவை, ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications