"விஷப்பாம்பு".. கமல் சொன்ன ஒரே ஒரு வார்த்தை.. திணறிப்போன திமுக, அதிமுக.. மநீமவிற்கு செம துணிச்சல்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாவது அணி குறித்தும், தொங்கு சட்டசபை குறித்தும் நேற்று குறிப்பிட்ட விஷயங்கள் தமிழக அரசியலில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் புதிய அணியாக மக்கள் நீதி மய்யம் வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முதல்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் களமிறங்குகிறார். மக்கள் நீதி மய்யம் தமிழகம் முழுக்க இந்த தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே உடன் கூட்டணி வைத்து இருப்பதால் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது பெரிய அணியாக உருவெடுத்து உள்ளது. இதனால் மநீம கண்டிப்பாக இந்த தேர்தலில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக
இதுவரை நடந்த தேர்தல் பிரசாரங்களில் கமல்ஹாசன் பல இடங்களில் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். வீல் சேர் விமர்சனம் சர்ச்சைக்கு உள்ளானதை தொடர்ந்து திமுக மநீம இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் கமல்ஹாசன் நேரடியாக திமுகவை தாக்கி பேசினார். அதோடு ஸ்டாலினையும் தனது ஸ்டைலில் கிண்டல் செய்து பிரசாரங்களை மேற்கொண்டார்.

பிரசாரம்
ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விட்டுவிட்டு .. 10 வருடமாக ஆட்சியில் இல்லாத திமுகவை மட்டுமே ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று திமுகவினர் சிலர் மக்கள் நீதி மய்யத்தை கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் கமல்ஹாசன் விடுவதாக இல்லை. அதிரடியான தான் செல்லும் இடங்களில் எல்லாம்.. திமுக மட்டுமின்றி அதிமுகவையும் விமர்சனம் செய்து வந்தார். சசிகலாவையும் கூட சில இடங்களில் தாக்கி பேசினார்.

திமுக அதிமுக
நேற்று திமுக, அதிமுக இரண்டையும் மாற்றி மாற்றி கமல்ஹாசன் தாக்கி பேசினார். அதிலும் இத்தனை நாட்கள் திமுகவை எப்படி விமர்சனம் செய்தாரோ அதே வீரியத்தோடு நேற்று திமுகவையும் கமல்ஹாசன் விமர்சனம் செய்தார். நேற்று சேலத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் குடிக்கும் நீர் இலவசமாக இருக்க வேண்டும்.

சட்டம்
சட்டமும், ஒழுங்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். லஞ்சம் இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இதை எல்லாம் நான் இலவசமாக கொடுப்பேன். நான் கொடுக்கும் இலவசங்களை பார்த்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். குடிக்க தண்ணீர் கேட்கிறான். அவனிடம் போய் வாஷிங் மெஷின் கொடுப்பேன் என்கிறீர்கள்.

தண்ணீர் இல்லை
குடிக்கவே தண்ணி இல்லாதவன் வாஷிங் மிஷனை வைத்து என்ன செய்வான்.எம்ஜிஆர் கண்ட ஊழலற்ற கனவு ஆட்சி இன்னும் அமையவில்லை. தமிழகத்தில் ஆளும் கட்சி விஷப்பாம்பு போன்றது; அதன் தலை துண்டிக்கப்பட்டு வால் மட்டும் ஆடிக்கொண்டிருக்கிறது. அதை நாம்தான் எதிர்கொள்ள வேண்டும். இன்னொரு கட்சியில் தலை இருக்கிறது.. ஆனால் அது ஆபத்தான தலை.

பொருளாதாரம்
தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது நம் கடமை. ஆட்சி அமைத்து கஜானாவை சுரண்டியவர்களை பற்றிய கணக்கை எடுப்போம் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதன் மூலம் தான் திமுகவிற்கு மட்டும் போட்டி அல்ல அதிமுகவிற்கு போட்டி என்பதை கமல்ஹாசன் நிரூபித்துள்ளார். அதோடு தொங்கு சட்டசபை குறித்தும் கமல்ஹாசன் பேசி உள்ளார்.

தொங்கு சட்டசபை
தொங்கு சட்டசபை அமைந்தால் இரண்டு தீய சக்திக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டேன். மீண்டும் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுப்பேன் என்று ஒரே போடாக போட்டுள்ளார். திமுக, அதிமுக பக்கம் செல்ல மாட்டேன், மய்யமாகவே இருப்பேன் என்பதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார். இது கண்டிப்பாக துணிச்சலான அறிவிப்புதான். இதனால்தான் திமுக, அதிமுக இரண்டையும் சமமாக கமல்ஹாசன் அதிரடியாக தாக்கி பேசி உள்ளார்.

சரித்திர வாய்ப்பு
ஒருவேளை தொங்கு சட்டசபை வந்தால் கமல்ஹாசன் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார் என்பதற்கான சிக்னலாகவே அவரின் இந்த சமீபத்திய பேச்சு பார்க்கப்படுகிறது .எந்த காரணம் கொண்டும் திமுக, அதிமுக பக்கம் இவர் செல்ல மாட்டார் என்பதற்கான மெசேஜாக இந்த பேச்சு பார்க்கப்படுகிறது... மக்கள் நீதி மய்யத்தை மாற்று கட்சியாக உருவாக்கும் முனைப்பில் அவர் இருக்கிறார்.. இதனால் திமுக, அதிமுக இரண்டுக்கும் வாய்ப்பு கொடுக்காமல் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கமல்ஹாசன் நேரடியாக அழைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications