மக்களைப் பற்றி கவலைப்படாத கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளரா? - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
கமல்ஹாசன் ஆறு மாதமாக எங்கோ சென்று ஒளிந்து விட்டு இப்போது முதல்வர் வேட்பாளராக வருகிறார் அவருக்கு மக்களைப் பற்றி கவலை எல்லாம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: கமல்ஹாசனுக்கு மக்களைப் பற்றி எல்லாம் கவலையில்லை, ஆறு மாதம் எங்கோ போய் ஒளிந்து இருந்து விட்டு இப்போது முதல்வர் வேட்பாளராக வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் விஜய் சேதுபதி முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி ரசிகர்கள் விரும்பவில்லை. தமிழர்களுக்கு எதிராக இருந்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அவரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசனை நான் பிக்பாஸ் பிஆர்ஓவாகத்தான் பார்க்கிறேன் என்றார். கடந்த ஆறு மாதமாக எங்கோ சென்று ஒளிந்து இருந்து விட்டு இப்போது வந்தவுடன் முதல்வர் வேட்பாளராக வருகிறார். அவருக்கு மக்களைப் பற்றி கவலை எல்லாம் இல்லை என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.
நீட் தேர்வு கவுன்சிலிங்கில் எந்த தாமதமும் ஏற்படாது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்யும். நீட் தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக அகில இந்திய மருத்துவ தேர்வு மையத்தை தான் கேள்வி கேட்க வேண்டும் என்றும் கூறினார். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.