படிப்படியாக மதுவிலக்கு என்று சத்தியம் செய்தார்களே.. என்ன ஆச்சு... மநீம கமல்ஹாசன் காட்டம்
சென்னை: அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையின் எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது? என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் சென்னை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பிற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்த கமல் ஹாசன் இன்று மீண்டும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: "அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையின் எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது?
மது யாருடைய அத்தியாவசிய தேவை?
அந்த வருமானத்தை நம்பி இருக்கும் அரசுக்கா? அல்லது தங்கள் சாராய ஆலைகளின் விற்பனை குறைந்ததை குறித்து கவலையில் உள்ள ஆண்ட, ஆளும் கட்சியினருக்கா?
40 நாட்களாக தொழில் இல்லாமல் வருமானமின்றி தவிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துங்கள் என்ற பலரது கோரிக்கைகளை கேட்கும் திறன் இல்லாத அரசுக்கும் இந்த வியாபாரத்தால் கொள்ளை லாபம் அடிப்பவர்களுக்கும் மட்டுமே மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன என்பத தெரிந்திருக்கக்கூடும்.
அண்டை மாநிலங்களில விற்பனை உள்ளது, என்பது பதிலாக இருந்தால், அவர்கள் பரிசோதிக்கும் வேகம், எளிய மக்களின் அரசின் உதவிகள் சென்றடைய அரசின் திட்டம் மற்றும் நடவடிக்கைகள் என்று பல காரணிகள் உள்ளது.
படிப்படியாக மதுவிலக்கு என்று சத்தியம் செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய அரசு இது.
எவரின் வழிகாட்டுதலின் படி இந்த ஆட்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறதோ அவர் 500 மதுக்கடைகளை மூடி தனது 3வது பதவிகாலத்தை தொடங்கினார் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வலியுறுத்துகிறது மக்கள் நீதி மய்யம்" இவ்வாறு கமல் ஹாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications