"அப்பா உலகநாயகன் வந்திருக்காரு! உன் பேரனை தூக்கிட்டாருப்பா! கமலை பார்த்து கதறிய இந்திரஜா சங்கர்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் (Robo Shankar - Kamal Hassan) உடலுக்கு நடிகர் கமல் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடைய மகள் இந்திரஜா, "அப்பா அப்பா எந்திரிப்பா, உலகநாயகன் வந்திருக்காருப்பா, உன்ன பாக்க வந்திருக்காருப்பா, உன் பேரனை தூக்கிட்டாருப்பா என அழுது கொண்டே சொன்னது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
நடிகர் ரோபோ சங்கர் இரைப்பை குடலில் ஏற்பட்ட ரத்தப்போக்கால் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இது திரைத்துறையினரிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு 46 வயதுதான் ஆகிறது.

இன்னும் சாதனை படைக்க நிறைய தூரம் இருக்கும் போது இப்படி அகால மரணமடைந்திருப்பது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
பெருங்குடி மருத்துவமனை
சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் வருவதற்கு முன்னரே அவரது வீட்டில் சின்னத்திரை பிரபலங்கள் கூடிவிட்டனர்.
இந்திரஜா
அவரது உடல் வந்ததும் உறவினர்களும் குடும்பத்தினரும் சின்னத்திரையினரும் கலங்கி அழுதனர். நேற்று நள்ளிரவு தனுஷ் வந்திருந்தார். அவர் மகள் இந்திரஜாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்னார். மேலும் "கவலைப்படாதே நான் இருக்கேன்" என்றார்.
தனுஷ் டூ உதயநிதி வரை
அது போல் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, என்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, நளினி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அது போல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தியிருந்தார்.
உதயநிதியிடம் கதறிய பிரியங்கா
அப்போது மனைவி பிரியங்காவும் மகள் இந்திரஜாவும் கலங்கி அழுத போது அவர்களுக்கு உதயநிதி ஆறுதல் கூறியிருந்தார். நடிகர்கள் வையாபுரி, சதீஷ், அர்ச்சனா, புகழ், ராமர் உள்ளிட்டோரும் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இரவெல்லாம் கண்ணீர்
அதிலும் நாஞ்சில் விஜயன் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தார். ரோபோவுக்கு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்ததும் துக்கம் தாளாமல் கதறி அழுதார். இதையடுத்து அவருடைய மனைவி மரியா காலை குழந்தையுடன் வந்திருந்தார்.
நாஞ்சில் விஜயன் மனைவி
அவர் "அப்பா எழுந்திருங்கப்பா, இனி எங்களுக்கு யாரு இருக்கா, ஏன்பா எங்களை விட்டு போனீங்க! இனி எனக்கு எதனா ஒன்னுன்னா நான் எங்க போவேன்" என கதறி அழுதார். அவரை இந்திரஜாவின் மாமியார் வளர்மதி அழைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்தினார்.
உடல்நலம் முக்கியம்
சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் அனைவரும் சொல்லும் ஒரே விஷயம், "பொதுவாக யாராவது இறந்தால் அதில் ஒரு மெசேஜ் இருக்கும். சங்கர் இறப்பிலிருந்து உடல்நலனை ஒரு மணி நேரமாவது பேணிக் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றனர்.
யார் இரங்கல் செய்தி
நேரில் வரும் திரைப்பிரபலங்கள் சமூகவலைதளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரோபோ சங்கர் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவை எம்பி கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல் இரங்கல்
கமல்ஹாசன் தனது இரங்கலில், ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரோபோவின் உடலுக்கு கமல் மரியாதை
இந்த நிலையில் இன்றைய தினம் ரோபோ சங்கர் வீட்டிற்கு கமல்ஹாசன் சென்றிருந்தார். அங்கு ரோபோவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது மகள் இந்திரஜா, மாப்பிள்ளை கார்த்திக், மனைவி பிரியங்கா உள்ளிட்டோர் கதறினர்.
கண்ணாடி பெட்டியை அடித்து
இந்திரஜா, "கண்ணாடி பெட்டியை அடித்து, அப்பா அப்பா எழுந்திருப்பா, உலக நாயகன் நம்ம வீட்டிற்கு வந்திருக்காரு!" என கதறினார். பின்னர் சங்கரின் பேரனை கமல்ஹாசன் தூக்கிய போது, "அப்பா உன் பேரனை உலகநாயகன் தூக்கிட்டாருப்பா, எழுந்திரு!" என அவர் அழுதது, கமலையே கலங்கடித்துவிட்டது.
கமல் ரசிகர்
ரோபோ சங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். ஆரம்ப காலகட்டங்களில் கமல் போல் மிமிக்ரி செய்தும் நடித்தும் பிரபலமடைந்தார். அது போல் கமலுக்கும் சங்கர் மீது அன்பு உள்ளது. ரோபோ சங்கரின் பேரனுக்கு நட்சத்திரன் என கமல்ஹாசன்தான் பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications