அடிக்க வேண்டிய இடத்தில் அடி.. இதுதான் கமலின் பலம்.. சரியாக பார்த்து பார்த்து செயல்படும் மநீம!
தமிழக அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னை மிக முக்கியமான நபராக முன்னிறுத்தி கொள்ளும் காலம் கனிந்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழக அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னை மிக முக்கியமான நபராக முன்னிறுத்தி கொள்ளும் காலம் கனிந்து இருக்கிறது. இந்த லோக்சபா தேர்தல் அவருக்கு தவிர்க்க முடியாத மாற்றத்தை அளிக்கும் தேர்தலாக இருக்க போகிறது.
நடிகர் கமல்ஹாசன் இப்போது முழு அரசியல்வாதி ஆகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். ஒரு வருடம் முன் மக்கள் நீதி மய்யம் கட்சியை அவர் தொடங்கிய போது, யாரும் அவர் இவ்வளவு உயரத்திற்கு வளர்வார் என்று நினைக்கவில்லை.
நேற்று திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இருந்து தனக்கும் அரசியல் செய்ய தெரியும், தனக்கு அரசியல் அரங்கில் கூட்டம் கூடும் என்பதை கமல்ஹாசன் நிரூபித்துள்ளார்.

நல்ல பேச்சு
நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பாக நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது அவரது அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான பேச்சாகும். முதலில் எப்போதும் போல மிகவும் சாதாரணமாக பேச்சை தொடங்கியவர், செல்ல செல்ல அடித்து ஆடினார். எப்போதும் போல இல்லாமல் புதிய ஸ்டைலில் பேசிய அவர் மக்களை பெரிய அளவில் கவர்ந்தார்.

முன்னிறுத்துகிறார்
அவர் தமிழகம், தேசியம் ஆகிய இரண்டில் உள்ள கட்சிகளையும் விமர்சனம் செய்தார். எல்லா கட்சிகளையும் விமர்சனம் செய்து தன்னை தனிப்பட்டவர் என்று காட்டிக்கொண்டார். அதோடு, அவர்களிடம் இல்லாத பல தகுதிகள் தன்னிடம் இருக்கிறது என்று அவர் தனது பேச்சில் வெளிப்படுத்தினார். வார்த்தைக்கு வார்த்தை தன்னை மற்றவர்களிடம் இருந்து பிரித்து பேசினார்.

முக்கிய பாயிண்ட்ஸ்
நேற்று கமல்ஹாசன் பேசியதில் சில விஷயங்கள், முக்கிய கட்சிகளை விமர்சிக்கும் வகையில் இருந்தது.
1. மருத்துவமனையில் இருக்கும் போது சேர்த்து வைத்த சொத்து எதுவும் உதவாது.
2. தூத்துக்குடியில் வாயில் சுட்டார்கள்.
3. நான் யாரிடமும் சீட் கேட்டு சென்று நிற்கவில்லை.
4. தேர்தலுக்கு பின் கூட்டணிகள் காணாமல் போய்விடும்.
5. பாஜகவின் பீ டீம் அல்ல நான்
6.நின்று அடிக்க போறவனுக்கு எதற்கு சீட்: நான் நின்று அடிப்பேன், என்று நிறைய விஷயங்களை மிக கடுமையாக குறிப்பிட்டார்.

தனித்து போட்டி
இப்படி தமிழகத்தில் இருக்கும் கட்சிகளை எல்லாம் விமர்சனம் செய்வதன் மூலம், தன்னை எல்லோருக்கும் எதிர் என்று காட்டிக்கொள்கிறார் கமல்ஹாசன் என்றுதான் சொல்ல வேண்டும். மிக கட்சிதமாக, உங்களை அரசியல்வாதிகள் ஏமாற்றிவிட்டார்கள், நான் புகலிடம் தருகிறேன் என்ற தொனி கமல்ஹாசன் பேச்சில் இருக்கிறது. அதுதான் அவரின் பலமும் என்றும் கூட சொல்லலாம்.

சினிமா தோரணை
அதேபோல் நடிகர் கமல்ஹாசன், அரசியல்வாதி கமல்ஹாசனுக்கு பல இடங்களில் உதவுகிறார் என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தில் தற்போது இருக்கும் ஹேண்ட்சம் அரசியல்வாதி கமல்ஹாசன்தான். அதேபோல் சினிமா போலவே தொடையை தட்டுவது, நெஞ்சை தட்டி பேசுவது என்று கமல்ஹாசன் அவ்வப்போது செய்யும் சில செயல்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறுகிறது.

கூட்டணி கிடையாது
அதோடு தேர்தலில் கூட்டணி இல்லாமல் வேறு போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு இவர் மீது நம்பிக்கை ஏற்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது. திமுகவிற்கு எதிரான பிரதான போட்டியாக தன்னை மாற்றிக்கொள்ளவே கமல்ஹாசன் அதிகம் முயல்கிறார் என்றும் கூறுகிறார்கள். கமல் பேச்சிலும் அது அதிகம் தென்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

தேர்தல் என்ன
இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தை வெல்வது கூட கடினம்தான். ஆனால், மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தை பிடிக்கும். 6%க்கும் அதிகமான வாக்குகளை பெறும் என்றே கணிக்கப்படுகிறது. கமல்ஹாசன் நினைப்பதும் கூட அதுதான். ஆழம் பார்க்கவே, இந்த தேர்தலில் காலை விடுகிறார். சட்டமன்ற தேர்தல்தான் அவரின் குறி என்று கூறுகிறார்கள். எப்படியோ அரசியலில் தன்னை முக்கிய தலைவராக தமிழகத்தில் கமல்ஹாசன் நிலைநிறுத்த தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications