கொரோனா: 4வது வாரத்தில் தமிழகம்.. அதீத விழிப்புணர்வு தேவைப்படும் கட்டம்.. கமல்ஹாசன் வீடியோ
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 4ஆவது வாரத்தில் தமிழகம் இருக்கிறது. இதனால் அதீத விழிப்புணர்வு தேவைப்படுகிறது என கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் இருவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பாதுகாப்பு, விழிப்புணர்வின் அவசியம் குறித்து கமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில் கொரோனா பாதிப்பானது 4-ஆவது , 5-ஆவது வாரங்களில் பன்மடங்கு அதிகமாகிறது என்பதை நாம் பல நாடுகளில் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். எதனால், வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாத போது பாதிக்கப்பட்ட சிலர் பல இடங்களுக்கு போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.
கொரோனா- தினக்கூலி, கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ1,000 உதவி தொகை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
கூட்டம்
பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் என்றால் அந்த 5 பேரிடம் இருந்து 25 பேருக்கு பரவும். அது இன்னும் 100 பேருக்கு பரவாமல் தடுக்க ஒரே ஒருவழிதான் இருக்கிறது. அது social distancing, அதாவது விலகியிருத்தல். அதீத விழிப்புணர்வு தேவைப்படுகிற கட்டமான 4 ஆவது வாரத்தில் தமிழகம் இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடங்களுக்கு போவதை தவிர்த்து விடுங்கள்.
அர்த்தமல்ல
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாங்க. நான் இப்போது வெளியே வந்துள்ளது, இந்த அறிக்கையை உங்களுக்கு சொல்வதற்காகத்தான். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் வைரஸ் உங்களுக்கு பரவாமலும் உங்ககிட்ட இருந்து நெருக்கமானவர்களுக்கு பரவாமலும் தடுக்கலாம். கொரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து என்பது அர்த்தமல்ல.
வெளியே போகாதீர்
ஆனால் வெகு சிலருக்கு அவர்களது உடல்நிலையை பொருத்து அது ஆபத்தாக மாறும். அதனால்தான் எல்லாரிடமும் இருந்து விலகியிருத்தல் அவசியமாகிறது. வீட்டுக்குள்ளே இருங்கள், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். மனதிற்கு பிடித்தவர்களிடம் தினமும் போனில் பேசுங்கள். ஆனால் வாங்க எல்லாரும் மீட் செய்யலாம்னு யாராவது கூப்பிட்டால் போகாதீர்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 21, 2020 |
மறவாதீர்
அவர்களால் நமக்கோ அல்லது நம்மால் அவர்களுக்கோ எதுவும் பாதிப்பு ஏற்படாமல் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். வந்தால் செய்ய வேண்டியதை வருமுன்னரே செய்வோம். விலகியிருங்கள், பாதுகாப்பாக இருங்கள். நமக்கு ஒன்றும் வராது என கண்மூடித்தனமான நம்பிக்கையினாலோ அசட்டு தைரியத்தினாலோ இந்த வைரஸ் பரவ நாம் காரணமாக இருந்துவிட கூடாது. முன்னெச்சரிக்கைதான் முக்கியமானது. மறந்துவிடாதீர்கள். வணக்கம் என ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.