திராவிட கட்சிகளை மீறி உங்களால் ஜெயிக்க முடியுமா.. பிரஸ் மீட்டில் வந்த கேள்வி.. கமல்ஹாசன் செம பதில்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி, 3வது ஆண்டில் காலடி எடுத்து வைத்த நிலையில், அதன் தலைவர், கமல்ஹாசன் இன்று பொருளாதார அறிக்கையை வெளியிட்டு பேட்டியளித்தார். தி.நகர் அலுவலகத்தில் வைத்து இந்த பேட்டி நடைபெற்றது.
Recommended Video
அப்போது, ஒரு முக்கியமான கேள்வி ஊடகத்தினரால் முன் வைக்கப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. ஒருவேளை உங்கள் தலைமையில் மூன்றாவது அணி உருவானால், அதை உடைத்து, உங்களால், வெற்றி பெற முடியுமா என்பதுதான் அந்த கேள்வி.
இதற்கு கமல்ஹாசன் தனக்கே உரித்தான பாணியில், உதாரணத்தோடு பதில் கூறினார். கமல்ஹாசன் பேட்டியை, மேலும் பார்க்கலாம், வாங்க:

திரைத்துறை உதாரணம்
நான் சாதாரணமான விஷயங்களை அல்லது சரித்திரத்தில் ஒரு சின்ன இடமாவது கிடைக்கும் என்று நினைக்கக்கூடிய விஷயங்களில்தான் முனைப்புடன் செயல்பட்டு உள்ளேன். என்னுடைய பிந்தைய தொழில் திரைத்துறையில் ஆகட்டும், இந்த மாதிரிதான். நான் பெரிதாக மதிக்கும் எம்ஜிஆர்-சிவாஜி போன்றோர் இருந்த திரைத்துறையில், இன்னொருவர் வருவதற்கு இடமே இல்லை. "தம்பி நீங்கள் சின்னசின்ன வேஷங்கள் செய்து விட்டு போங்கள்" என்று தான் சொன்னார்கள்.

ஆசியோடு கைப்பற்றினோம்
அவர்கள் இருக்கும்போது, அவர்கள் ஆசியுடன், அவர்கள் இடத்தை கைப்பற்றினோம். அவர்களின் போட்டியாளர்களாக இல்லை. அவர்களது ஆசியுடன் இதைச் செய்தோம். அந்த நிலைமை அரசியலிலும் எப்போதும் இருக்கிறது என்று நம்புகிறேன். மற்ற உதாரணங்களை வைத்து நான் தடுமாறியது கிடையாது. என் உதாரணம், நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

குறைந்த காலகட்டம்
உங்கள் கட்சி நகர்ப்புறத்திற்கான கட்சி என்பது லோக்சபா தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரத்தை வைத்து பார்த்தால் தெரிகிறது. அந்த தேர்தலின்போது, எங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க, எங்களுக்கு கிடைத்த நேரம் 18 நாட்கள் மட்டுமே. அந்த நேரத்திற்குள் இவ்வளவு தூரம் ஊடுருவ முடியும் என்பதே, எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையை கொடுத்துள்ளது. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கிராம சபை
கிராமத்திற்கு செல்ல வேண்டும், அங்கும் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. கிராமசபை யோசனை கிடப்பில் கிடந்தது. நாங்கள் தான் அதை முன்னெடுத்தோம். இப்போது பிற அரசியல் கட்சிகள் போட்டி போட்டு அதை செய்கிறார்கள். மக்களுக்கு அது நல்லதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கெடுத்த மாதிரி திருத்துவோம்
வாக்காளர் திருந்தனுமே, பணம் வாங்காமல் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், வாக்காளர்கள் திருந்தனும் என்றால் ஏதோ அவர்கள் அந்த தவறை ஆரம்பித்து வைத்தவர்கள் போல ஆகிறது. எப்படி அவர்களை கெடுத்தோமோ அதே போல அவர்களை திருத்த முடியும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தனது பேட்டியின்போது தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications