இன்றுடன் ஒரு வயதை பூர்த்தி அடைந்த மக்கள் நீதி மய்யம்.. கமல் சாதித்தது என்ன? கடந்து வந்த பாதை என்ன?
சென்னை: இன்றுடன் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. இந்த ஓராண்டில் கமல்ஹாசன் சாதித்தது என்னென்ன?
உலகில் உள்ள நாட்டு கொடிகளை விட தற்போது அரசியல் கட்சிகளின் கொடிகள்தான் ஏராளமாகியுள்ளது. பணபலம், பிரபலம், ஆள்கள் பலம் இருந்தால் அரசியல் கட்சிகளை தொடங்கிவிடுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, பிரபல நடிகர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் கதாபாத்திரத்துடன் ஒன்றி போகும் ரசிகர்கள் இந்த நடிகர் அரசியலுக்கு வந்தால் திரைப்படத்தில் வருவது போல் ஊழலை ஒழிப்பார், லஞ்ச லாவண்யத்தை அழிப்பார் என எண்ணி அவர்களாகவே அழைப்பதும் உண்டு.

கடும் விமர்சனம்
இன்னும் சிலரை உசுப்பேற்றி உசுப்பேற்றியே அவர்களை அரசியலுக்கு வரவழைத்து விடுவர். அப்படிதான் கமல்ஹாசனையும் வரவழைத்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார் கமல்ஹாசன். டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு என அனைத்திலும் விமர்சனங்கள் கடுமையாக இருந்தது. அப்போது தமிழக அமைச்சர்கள் பேசுகையில் அரசியலுக்கு வந்து பார்த்தால்தான் அது எத்தனை முள்படுக்கை என்பது தெரியவரும் என கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்து வந்தனர்.

நிர்வாகி
மேலும் மத்திய- மாநில அரசுகளின் ஆட்சி, அதிகாரத்தின் மீது அதிருப்தி அடைந்த கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி கலாம் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அறிவித்தார். இதை அறிவித்த கையுடன் நிர்வாகிகளையும் அறிவித்தார்.

கிராம சபை கூட்டம்
அந்த நாள் முதல் இவர் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற கமல்ஹாசன் மக்களின் பிரச்சினைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார். மக்களோடு மக்களாக பழகினார். கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த கிராம சபை கூட்டங்களுக்கு புத்துயிர் அளித்தார்.

அரசியலுக்கு
சில கிராமங்களை தத்தெடுத்தார். இத்தனை அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்க கிராம சபை கூட்டங்கள் மக்களின் ஆயுதம் என்பதையும் உணர்த்தினார். இதைத் தொடர்ந்து இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம் என்பதை வலியுறுத்தி பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை விளக்கினார்.

வெட்கம்
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து கூட்டணி என்று அறிவித்துள்ள கமல்ஹாசன், திமுகவை அழுக்கு பொதி என்று விமர்சனம் செய்திருந்தார். அதுபோல் கிராம சபை கூட்டங்களை கமல் நடத்தியதை தொடர்ந்து ஸ்டாலினும் கிராம ஊராட்சி கூட்டங்களை நடத்தினார். இதை கமல்ஹாசன், நேற்று வந்த சின்னப்பையனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே வெட்கமாக இல்லையா என கேள்வி எழுப்பினார்.

ஓராண்டு நிறைவு
இதுபோல் அதிமுக, திமுக, ஏன் 40 ஆண்டுகள் நட்பு பாராட்டிய ரஜினிகாந்த்தையும் அவ்வப்போது மறைமுகமாக சாடியுள்ளார். கேரளம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய முதல்வர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார். இத்தகைய கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்துக்கு இன்றுடன் ஒரு வயது பூர்த்தியாகியுள்ளது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை தூசு போல் துடைத்தெறிந்து விட்டு வீறுநடைபோடும் மக்கள் நீதி மய்யம் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications