லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது.. திமுக கூட்டணிக்கு ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
விரைவில் நமது நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன.

தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக மற்றும் அதிமுக இடையே தான் பிரதான போட்டி.. பாஜகவும் இங்கே களத்தில் உள்ளது.
திமுக கூட்டணி: இதில் அதிமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி முடிவுகள் இறுதி செய்யப்படும் என்பதே அதிமுக நிலைப்பாடாக இருக்கிறது. மறுபுறம் திமுக பல்வேறு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டனர். இந்த முறை கமலும் திமுக கூட்டணிக்கு வரலாம் என பல வாரங்களாகக் கூறப்பட்டு வந்தது.
அதிலும் கடந்த சில நாட்களாகவே கூட்டணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவின. இதற்கிடையே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்திருந்தார். அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பிற்குப் பிறகு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கமல்: அப்போது பேசிய கமல்ஹாசன், "இந்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது கட்சியும் அப்படி தான். அதேநேரம் இந்தக் கூட்டணிக்கு எங்கள் ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயமே இல்லை. நாட்டிற்காக எடுக்கப்பட்ட முடிவு" என்றார். லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த போதிலும் அவர்கள் போட்டியிடவில்லை. அதேநேரம் திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிடக் கமல் விரும்பியதாகத் தெரிகிறது. இருப்பினும், திமுக தரப்பு அதற்கு உடன்படவில்லை. கமல்ஹாசனை ராஜ்யசபா எம்பி தொகுதியை மட்டுமே தர திமுக தயாராக இருந்தது. இது குறித்த பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதில் தான் இன்று இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்: லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இதுவரை பல்வேறு கட்சிகள் கூட்டணியை இறுதி செய்துள்ளன. விசிகவுக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி, மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல மதிமுகவுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.
அதேநேரம் இதுவரை காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. இருப்பினும், இன்று அல்லது நாளை காங்கிரஸ் கட்சி உடனான தொகுதிப் பங்கீடும் இறுதியாகும் எனத் தெரிகிறது. கடந்த முறை புதுச்சேரியுடன் சேர்த்து 10 இடங்களில் காங்கிரஸ் களமிறங்கிய நிலையில், இந்த முறையும் அதேபோலத் தான் இடங்கள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications