நல்லதை நினைக்கும் அனைவருமே எம்ஜிஆரின் நீட்சிதான்.. நாங்கள் அவர் வாரிசுதான்.. கமல்ஹாசன்
சென்னை: நல்லதை நினைக்கும் அனைவரும் எம்ஜிஆரின் வாரிசுகள்தான் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை போரூரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தனது உரையில் கூறுகையில், இந்த போரூர் பகுதி எனக்கு மிகவும் பரிட்சயமான பகுதியாகும். அந்த காலத்தில் சினிமா படப்பிடிப்புகள் இங்கு எடுக்கப்பட்டன. ஆபத்தான சேஸிங் காட்சிகள் எல்லாம் இங்குதான் எடுக்கப்பட்டன.
இங்கு எந்தவிதமான போக்குவரத்தும் இருக்காது என்பதால் இங்கே எடுக்கப்பட்டது. ஆனால் போரூர் என்ற கிராமம் நகரமாக அதிவேகமாக வளர்ந்து விட்டது. ஆனால் அடிப்படை ஆதார வசதிகள் எதுவும் அது போல் வளரவில்லை என்பதை நானும் நீங்களும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குடத்துடன் தண்ணீர்
இங்கே மதுரவாயல் தொகுதியில் வானகரம், நொளம்பூர் போன்ற பகுதிகளில் தாய்மார்கள் குடத்துடன் தண்ணீருக்காக அலைகிறார்கள். இதை நினைத்தால் மாற்றியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இங்கே நிலத்தின் விலை ஏறிய அளவுக்கு உங்கள் வாழ்வாதாரத்தின் நிலை உயரவில்லை என்பதுதான் உண்மை.

மேம்பாலம்
இந்த மக்களை காக்க வந்திருக்கிறோம் என்ற எண்ணமுள்ள அரசு வந்தால், இவை ஒரு ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டிய வேலை. ஆனால் இன்னும் துறைமுகத்திலிருந்து வரும் மேம்பாலம் கட்டிமுடித்த பாடில்லை. 10 ஆண்டுகளாக காத்திருக்கிறது. இந்த நிலை எல்லாம் மாறக் கூடியதே.

காதுகள்
மேல் பதவிகளுக்கு திருடர்கள் வராமல் நேர்மையானவர்கள் வந்தால் எல்லாம் நடக்கும். என்னை கேட்கிறார்கள் நான் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுகிறேனாம். தேர்தல் நெருங்கியவுடன்தான் நான் அவரை சொந்தம் கொண்டாடுவது தெரிகிறது. இதற்கு முன்னர் உங்களுக்கு காதுகள் கேட்கவில்லையா?

எண்ணங்கள்
ஏனெனில் எங்கள் முதல் கோஷமே நாளை நமதே. திரும்ப திரும்ப அந்த பெயரை சொல்லி சொல்லி காசு பார்க்கும் கூட்டம் அல்ல எங்கள் கூட்டம். நாங்கள் காந்தி, எம்ஜிஆர், பெரியார், அம்பேத்கர் பெயரையும் சொல்கிறோம். அவர்களது நல்லெண்ணங்கள் எல்லாம் எங்கள் எண்ணங்களாக வேண்டும் என விரும்புகிறோம்.

எம்ஜிஆரின் வாரிசுகள்
ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வந்து உணவருந்த வேண்டும் என நினைத்த எம்ஜிஆரின் கருணை எங்களுக்கு இருப்பதால் நாங்கள் அவர் நீட்சிதான். இன்னும் அடுத்த கட்டத்திற்கு போகிறேன். அடித்து சொல்வேன், நல்லதை நினைக்கும் எல்லோருமே எம்ஜிஆரின் வாரிசுகள்தான். அவர் மக்கள் திலகம் என்பதை மறந்துடாதீங்க.

வாரிசு
மக்களில் யார் வேண்டுமானாலும் நான் அவரது வாரிசு என சொல்வார்கள். காந்தி நமது தாத்தா, நான் அவருக்கு வாரிசு. இத்தனை நாள் நீங்கள் அவரை மறந்திருந்தீர்கள். நான் அவர்களை ஞாபகப்படுத்தியுள்ளேன். உங்கள் ஆசி இருந்தால் நான் சொன்ன குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் நாளும் விரைவில் வரும் என்றார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications