"நாடாளுமன்றத்தில் நம்மவர்.." ஆஹா இதை நோட் பண்ணீங்களா.. காய் நகர்த்தும் கமல்.. அப்போ அடுத்து அதுதானா
சென்னை: கமல்ஹாசன் லோக்சபா தேர்தலில் என்ன முடிவெடுக்க உள்ளார் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் ஆண்டு விழாவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை அங்கே பெரிய சலசலப்பு எதுவும் இல்லை. ஏற்கனவே அவர்கள் கூட்டணிக் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார்கள்.
லோக்சபா தேர்தல்: அதேநேரம் இந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், அனைத்து கூட்டணிக் கட்சிகள் உடனும் திமுக பேச்சுவார்த்தையை நடத்திவிட்ட போதிலும், மக்கள் நீதி மய்யம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமலேயே இருக்கிறது. இதனால் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணையுமா என்பதில் சந்தேகம் இருந்தே வந்தது.
மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை அக்கட்சிக்குக் கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் தான் செல்வாக்கு அதிகம்.. எனவே, இதை மனதில் வைத்து நகர்ப்புறம் அதிகம் வரும் தொகுதிகளைக் கேட்டுப் பெறலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும், திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாத நிலையில், இது நடக்குமா என்பது சந்தேகமே..
ராகுல் உடன் நட்பு: அதேநேரம் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உடன் நல்ல நட்பு இருக்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி கலந்து கொண்ட பாரத் ஜூடோ யாத்திரையில் கூட ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கமல் கலந்து கொண்டார். அப்போது முதலே கூட்டணி பேச்சுகள் இருந்தது. ராகுல்- கமல் நட்பு காரணமாக திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் வரலாம் எனச் சொல்லப்பட்டது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் கமல் கட்சி போட்டியிடலாம் எனக் கூறப்பட்டது.
அழைப்பிதழ்: இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் தான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் நேரடியாகப் போட்டியிடலாம் எனக் கூறப்படும் நிலையில், அதைச் சூசகமாகக் குறிப்பிடும் வகையிலேயே இந்த அழைப்பிதழ் இருக்கிறது.
மக்கள் நீதி மையத்தின் 7ஆவது தொடக்க விழா வரும் 21ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், அதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவக்கிய நாள் பிப்ரவரி 21. வரும் பிப்ரவரி 21-ந் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும்.
அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.. தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!! வாருங்கள்! ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். நாடாளுமன்றத்தில் நம்மவர்" என்று கூறப்பட்டுள்ளது.
இதை நோட் பண்ணீங்களா: லோக்சபா தேர்தலில் கமல் களமிறங்கப் போகிறார் என்பதை உணர்த்தும் வகையிலேயே நாடாளுமன்றத்தில் நம்மவர் என்ற வாசகத்துடன் அந்த அழைப்பிதழ் இருக்கிறது. வரும் 21ஆம் தேதி ஆண்டு தொடக்க விழாவுக்குப் பிறகு அவர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் தான் அவர் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். கமல்ஹாசன் தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் எதாவது ஒன்றில் அவர் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
சின்னம்: மேலும், கடந்த முறையைப் போலவே கமல் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் காங்கிரஸ் தரப்பு கமல் கட்சியினர் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் வரும் நாட்களில் இறுதியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications