தேர்தல் என்பது முடிவல்ல.. மக்கள் பணியில் முடிவே கிடையாது.. கமல் உருக்கமான கடிதம்!
சென்னை: தேர்தல் என்பது முடிவல்ல, மக்கள் பணியில் முடிவென்பது கிடையாது என நாளை வாக்கு எண்ணும் நிலையில் கமல்ஹாசன் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது கட்சியினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். வாக்கு எண்ணும் நாள் - கட்சியினருக்கு தலைவரின் கடிதம்:

தேர்தல் முடிவுகள்
நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்து விடக்கூடாது.
வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களைத் தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குடும்பத்தினர் பாதுகாப்பு
தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது. வாக்குபதிவு முடிந்த மறுநாள் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை இங்கே மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

நன்கறிவோம்
தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பது கிடையாது என்பதை நாம் நன்கறிவோம். இந்த தேர்தல் நமக்கு ஒரு புதிய அனுபவம்... புதிய தொடக்கம்... இந்தத் தேர்தல் பயணத்தில் மக்களுக்கு நம் மீதிருந்த நம்பிக்கையை உணர்ந்திருக்கிறோம். மக்கள் அன்பே நம் பலம். மக்கள் நலனே எதைக்காட்டிலும் முதன்மையானது.

தோல்வி
வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை. தோல்வி எனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். 'நாமே தீர்வு' நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அன்றாடம் வரும் அறிக்கைகள் மூலம் அறிகிறேன். உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
மக்களுக்காக, மக்களுடன் களத்தில் நிற்போம் என கமல்ஹாசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications