பிப்.11ல் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு.. யாருடன் கூட்டணி.. கமல் எடுக்கப் போகும் செம்ம முடிவு!
சென்னை: பிப்ரவரி 11ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடன் கூட்டணி அமைப்பது அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தும் என கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெற போகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.
அதிமுக பாஜக ஒரு அணியாகவும், திமுக காங்கிரஸ் ஒரு அணியாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தனியாக போட்டியிடுகின்றன.
கமல் பிரச்சாரம்
அதிமுக, திமுக அணிகளில் இதுவரை கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு முடியவில்லை. ஆனாலும் பிரதான கட்சிகளான அதிமுக திமுக இரண்டுமே தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே ஒரு முறை தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்துவிட்டார்.
ஓய்வில் கமல்ஹாசன்
இப்போது கமல்ஹாசன் காலில் சிறுஅறுவை சிகிச்சை முடித்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார். அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசனிடம் தேர்தல் அறிவிப்பு வெளியிட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை எப்போது வெளியிட போகிறீர்கள்? என்று கேட்டார்கள்.அப்போது பதில் அளித்த கமல்ஹாசன். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். நல்லவர்களோடு கூட்டணி அமைப்போம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம். அரசியலில் நல்லவர்களாக இருப்பவர்கள் வெற்றி பெறும் அளவுக்கு வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். அதுபோன்றவர்களுடன் நிச்சயம் கை கொடுப்போம் என்றார்.
ஆம் ஆத்மி உடன் கூடடணியா
இதனிடையே கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி சேருவாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி சேர உள்ளதாக ஒரு தகவலும், மறுபக்கம் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக இன்னொரு தகவலும் உலா வருகிறது. ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேர அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.
மநீம கூட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் காலை 10 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூடுகிறது. மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 600 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கமல் கூட்டணி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.