கமல் இன்னும் "களத்தூர் கண்ணம்மா"வாகவே இருக்காரே.. ஜெயக்குமார் செம நக்கல்!
கமல் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: "கமலஹாசன் குழந்தை. அவர் இன்னும் களத்தூர் கண்ணம்மா ஸ்டைலிலேயே இருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் புயல் பாதித்த மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:
நிதி கிடைக்கும்
"கஜா புயல் தாக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இடைக்காலமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு மேலும் நமக்கு நிதி அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.
ஏரியல் சர்வே
இதையடுத்து, முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தது குறித்து கமல் விமர்சனம் செய்துள்ளாரே என்று அமைச்சரை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், "ஏரியல் சர்வே'' என்ற ஒரு வார்த்தையே இருக்கிறது. முதலில் கமல் அதைப்பற்றி படிக்கவேண்டும்.
கமல் ஒரு குழந்தை
பேரிடர் காலங்களில் முதல்வரோ, பிரதமரோ ஆகாய மார்க்கமாக சேதங்களை பார்வையிடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. கமலஹாசன் குழந்தை. அவர் இன்னும் களத்தூர் கண்ணம்மா ஸ்டைலிலேயே இருக்கிறார்" என்று பதிலளித்தார்.
எலும்பு நிபுணரா?
முதல்வருக்கு முதுகெலும்பு இல்லை என்கிற வைகோ சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, "வைகோ எப்போது எலும்பு நிபுணர் ஆனார் என்று தெரியவில்லை? அதிமுகவை சார்ந்த அனைவருக்கும் முதுகெலும்பு இருக்கிறது" என்று பதில் சொன்னார் அமைச்சர் ஜெயக்குமார்.