ஸ்டாலின் பதவியேற்பு விழா.. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.. 'அவர்' ஒருவரைத் தவிர
சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்வில், அந்த ஒரு கட்சியின் தலைவர் மட்டும் சிரித்தும் சிரிக்காமல் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றிப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அது பாஜக சார்பில் இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், சரத்குமார், வேல்முருகன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சோகமான பார்வை
மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்ணீர் சிந்திய காட்சி, காண்போரை நெகிழச் செய்தது. அதுபோல், கூட்டணி கட்சித் தலைவர்கள், மற்ற கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், குடும்பத்தினர் என்று அனைவரும் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பதை காண ஆவலோடு இருக்க, ஒருவர் மட்டும் கனத்த இதயத்தோடு காணப்பட்டார். அவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

கவலை ரேகைகள்
விழாவுக்கு நேரம் தவறாமல் சரியான நேரத்தில் வந்த கமல்ஹாசன், மற்ற கட்சித் தலைவர்கள் சிலருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, சிலரிடம் சில வார்த்தைகளை மட்டும் உதிர்த்துவிட்டு தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தார். விழாவில் பங்கேற்ற அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்பதால், கமலும் மாஸ்க் அணிந்திருந்தார். ஆனால், அதையும் மீறி அவரது முகத்தில் கவலை ரேகைகள் இருந்ததை காண முடிந்தது.

பெரும் தோல்வி
இதற்கு முக்கிய காரணம், அவரது கட்சியின் தற்போதைய நிலைமை தான். சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்திருந்தது. குறைந்தபட்சம், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் கூட வெற்றிப் பெறவில்லை. அதுமட்டுமின்றி, சீமானின் நாம் தமிழர் கட்சி அளவுக்கு கூட தாக்கம் ஏற்படுத்த முடியாமல் போனது தலைவர் கமலை ரொம்பவே வேதனைப்படுத்திவிட்டதாம்.

கமல்ஹாசன் வேதனை
எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த மகேந்திரன், தனது பெயரை பெரியளவில் டேமேஜ் செய்துவிட்டதாக புலம்பியிருக்கிறாராம் கமல். மகேந்திரன் கட்சியை விட்டு வெளியேறியது எல்லாம் ஒரு விஷயமே அல்ல.. ஆனால், வெளியே சென்றவர், 'நான் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயருக்கு களங்கம் விளைவித்துவிட்டதாக வேதனைப்பட்டிருக்கிறாராம். அதன் வெளிப்பாடே, இன்றைய பதவியேற்பு விழாவிலும் எதிரொலித்து இருப்பதாக கூறுகின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications