சாதனையைச் சாத்தியமாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு.. அதேநேரம் கமல் முன்வைத்த முக்கிய கோரிக்கை!
சென்னை: காலை உணவு திட்டத்தால், வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும். இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நேற்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நேற்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் 16 லட்சம் மாணவர்கள் பள்ளியிலேயே காலை உணவு சாப்பிட்டு பயன் பெறுவார்கள். இதற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்று பல திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், இந்த காலை உணவு திட்டம் தான் தனக்கு பெரிய மன நிறைவை தருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முதல்வரை பாராட்டியுள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 16 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும்.

இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பரிய நெல் ரகங்களையும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும்.
விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications