நாட்டை பிரிக்க வேண்டும்? கமல் பேச்சால் வெடித்தது சர்ச்சை… விழுந்தடித்து விளக்கம் சொன்ன மநீம
சென்னை: ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதியே என்று ஆசாத் காஷ்மீர் சர்ச்சை பேச்சுக்கு கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமலஹாசன் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.அப்போது முக ஸ்டாலினை அவர் விமர்சித்து பேசினார்.
ஒருவேளை நான் சட்டசபைக்கு சென்றால் சட்டையைக் கிழித்துக் கொண்டு வரமாட்டேன். அப்படியே, கிழிந்தாலும் புது சட்டை ஒன்றை அணிந்து கொண்டு தான் வெளியே வருவேன் என்று பேசினார். அதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், கமலஹாசனை கடுமையாக விமர்சித்து இன்று கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
உரிய பதிலடி
உதயநிதி ஸ்டாலினும், கமலஹாசனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்க, சமூகவலைதளங்களில் இவ்விரு கட்சித் தொண்டர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது... அதே கல்லூரி நிகழ்வில் கமலஹாசன் பேசிய மற்றொரு விவகாரம் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
சர்ச்சையான பேச்சு
அதுவும் மாநில அளவில் மட்டுமல்லாது... தேசிய அளவில் சர்ச்சையையும், கடும் விவாத பொருளாகவும் உருவெடுத்து இருக்கிறது.அந்த நிகழ்ச்சியில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட கமலஹாசன் பேசியது இதுதான்:
பொதுவாக்கெடுப்பு நடத்தலாம்
ஏற்கனவே இந்த நாட்டை இரண்டாக கிழித்து விட்டோம். அதனால், ஏன் மீண்டும் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? காஷ்மீரில் ஏன் இந்திய அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த மறுக்கிறது? ஏன் அரசு பயப்படுகிறது?
முட்டாள்தனம் செய்யும் அரசு
ஆசாத் காஷ்மீர் பகுதியில், ஜிகாதிகளின் படங்களை ரயில்களில் ஹீரோவாக சித்தரிக்கின்றனர். அது முட்டாள்தனம். அது மாதிரியான ஒரு முட்டாள் தனத்தை தான் இந்திய அரசும் செய்கிறது.
|
நாட்டை பிரிக்க வேண்டும்
ஒட்டுமொத்தமாக, நோக்கம் என்பதே நாட்டை பிரிக்க வேண்டும். அவ்வளவு தான். இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தினாலே எந்த ராணுவ வீரரும் பலியாக மாட்டார்கள் என்று கமலஹாசன் பேசியிருக்கிறார்.
ஆசாத் காஷ்மீர் பேச்சு
அந்த பதிலில் காஷ்மீரை... ஆசாத் காஷ்மீர் என்று கூறி... வெடித்தது சர்ச்சை. காஷ்மீரை எப்படி பிரிக்கலாம் என்று கமலஹாசன் பேசலாம்?அப்படி என்றால்... கமலஹாசன் ஒரு பிரிவினைவாதியா? என்ற கடுமையான விமர்சனங்கள் வெளியாகின.
அறிக்கை வெளியீடு
விமர்சனங்களை பற்றி கமலஹாசன் கண்டு கொள்ளாமல் இருக்க... வட இந்தியாவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சியில் இந்த விவகாரம் தீயாய் பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் தற்போது மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
|
அர்த்தம் வேறு
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கமலஹாசனின் கருத்து திரித்து கூறப்பட்டு இருக்கிறது. அவர் சொன்ன அர்த்தம் வேறு. ஒட்டுமொத்த காஷ்மீரும், இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதியே.
துணை நிற்கும்
சுய நலமின்றி நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களுக்கும், பாதுகாப்பு படைக்கும் எப்போதும் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.