தியாகம் அல்ல வியூகம்.. 30 தொகுதிகளில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம்.. அறிவித்தார் மநீம கமல்ஹாசன்!
சென்னை: திமுக கூட்டணியை ஆதரித்து 30 தொகுதிகளில் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் நிற்கிறது. இதனால், தமிழக தேர்தல் களத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த முறை மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். மேலும், கமல் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியுள்ளது திமுக. அடுத்த ஆண்டு காலியாகும் ராஜ்யசபா இடத்தில் மநீம சார்பில் ஒருவர் எம்.பி ஆவார்.
திமுக இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் வரும் 29ஆம் தேதி முதல் திமுக கூட்டணியை ஆதரித்து 30 தொகுதிகளில் நேரடியாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஈரோட்டில் 29ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் கமல், ஏப்ரல் 16 வரை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மேலும் பேசிய கமல்ஹாசன், "மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள். இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள். அவர் சொன்ன பதிலை தான் நானும் செல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை. நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது.
மக்களவைத் தேர்தலில் நாம் போட்டியிடாதது தியாகம் அல்ல, வியூகம். ஒரு தொகுதி, 2 தொகுதி என இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் என்னால் பிரச்சாரம் செய்ய முடியும். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால் அவருக்கு தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன்.
என் அரசியல் எதிரி சாதியம்தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சாதியம் தான் எதிரி. 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications