‘காமராஜ்’ ஆட்சியமைக்க திட்டம்.. கையும் களவுமாக சிக்கிய விஜய்! ஆளுநர் எடுக்கும் முடிவு! அவ்வளவு தான்!
சென்னை: தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை மையமாகக் கொண்டு வெடித்துள்ள "குதிரை பேர" சர்ச்சை அரசியல் சூழலை மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் நேரடியாக ஆளுநர் மாளிகை வரை சென்றிருப்பதால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான சாத்தியங்களும் உள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால், பல்வேறு கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, தவெக பலம் 113 ஆக உயர்ந்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததால், எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது.
தமிழக வெற்றிக் கழகம்
ஆனால் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதோடு சபாநாயகர் வாக்குரிமை உள்ளிட்ட கணக்கீடுகள் காரணமாக, பெரும்பான்மைக்குத் தேவையான "மேஜிக் நம்பர்" மீண்டும் சிக்கலாக மாறியுள்ளது. இதனால் இன்னும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தேவைப்படும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில்தான் அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜின் விவகாரம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜ்
முதலில், காமராஜ் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாகவும், அவரது ஆதரவு கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு எதிராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் மக்கள் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்து பரபரப்பு புகார் அளித்தார். "எங்கள் எம்.எல்.ஏ.வை காணவில்லை. குதிரை பேரம் நடைபெறுகிறது. போலி கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தினகரன் குற்றஞ்சாட்டினார். இதனால் தமிழக அரசியல் நள்ளிரவிலேயே வெடித்தது. பின்னர் காமராஜ் நேரில் வந்ததும் பரபரப்பு இன்னும் அதிகரித்தது.
தவெக தரப்பு வீடியோ
"அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து என்னுடையது அல்ல" என்று அவர் மறுத்ததாக கூறப்பட்டது. இதற்குப் பதிலடியாக தவெக தரப்பு வீடியோ வெளியிட்டது. அதில் காரில் அமர்ந்தபடி காமராஜ் கடிதத்தில் கையெழுத்திடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. "அவர் சுய விருப்பத்தோடு ஆதரவு அளித்தார். பேரம் எதுவும் நடைபெறவில்லை" என்று தவெக விளக்கம் அளித்தது.
ஆளுநர் அர்லேகர்
ஆனால் இதன் மூலம் மற்றொரு பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் காமராஜ் ஆதரவு கடிதம் உண்மையா? மறுபுறம் அது போலியா? என்ற விவகாரம் விசாரணைக்கு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த சர்ச்சை காரணமாக ஆளுநர் அர்லேகர் மிகவும் எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, "118 எம்.எல்.ஏ.க்களின் உறுதியான ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க அழைக்க முடியாது" என்று ஆளுநர் வெளிப்படையாக கூறியிருந்தார்.
குதிரை பேரம்
அதோடு "குதிரை பேரத்திற்கு நான் இடமளிக்க மாட்டேன்" என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், தினகரன் அளித்த புகார் ஆளுநரின் கவனத்தை தீவிரமாக ஈர்த்துள்ளது. அரசியல் சட்டப்படி, மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என்று ஆளுநர் கருதினால், அவர் ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்ப முடியும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம். முதலில் 6 மாதங்களுக்கு அமலாகும் இந்த ஆட்சியை, தேவையான சூழலில் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
கட்சி தாவல் தடை சட்டம்
இதனால், தமிழக அரசியல் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? அதிமுக-திமுக கூட்டணி உருவாகுமா? அல்லது ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? என்ற கேள்விகள் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், அரசியல் சட்ட நிபுணர்கள் வேறொரு கருத்தையும் முன்வைக்கின்றனர். "ஒரு எம்.எல்.ஏ. சுய விருப்பத்தோடு ஆதரவு அளித்தால், அது குதிரை பேரம் என்று நிரூபிப்பது எளிதல்ல. குறிப்பாக ஒரே ஒரு உறுப்பினர் ஆதரவு அளிப்பது, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் வராது" என அவர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசியல்
இதனால், காமராஜ் விவகாரத்தில் ஆளுநர் என்ன முடிவெடுக்கிறார் என்பதே அடுத்த தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கக்கூடிய முடிவாக இருக்கும். இன்னும் 48 மணி நேரத்துக்குள் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் விஜய் முதல்வராகலாம். இல்லையெனில் தமிழக அரசியல் நேரடியாக டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications